2,549 பேர் பலி..! இந்தியாவில் 78 ஆயிரத்தை எட்டியது கொரோனா பாதிப்பு..!

By Manikandan S R SFirst Published May 14, 2020, 9:10 AM IST
Highlights

இன்றைய நிலவரப்படி இந்தியாவில் 78,003 மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தற்போது அறிவித்திருக்கிறது. அவர்கள் தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டிருக்கும் நிலையில் கொரோனா நோய்க்கு தாக்கு பிடிக்க முடியாமல் 2,549 பேர் பலியாகி இருக்கின்றனர்.

உலக அளவில் பெரும் நாசங்களை விளைவித்து வரும் கொடிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவிலும் அசுர வேகம் எடுத்து இருக்கிறது. நாளுக்கு நாள் உயர்ந்து வரும் கொரோனா வைரஸின் பாதிப்பை கட்டுப்படுத்த மக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வலியுறுத்தி நாடு முழுவதும் அமலில் இருக்கும் ஊரடங்கு மே 17ம் தேதி வரை நீட்டிக்கபட்டுள்ளது.அதன்பிறகு 4ம் கட்ட ஊரடங்கு மாறுபட்ட நிலையில் இருக்கும் என பிரதமர் அறிவித்துள்ளார். ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வந்த போதும் கடந்த சில நாட்களாக தினமும் 3000 நபர்களுக்கு மிகாமல் கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது.  மேலும் பலியானவர்களின் எண்ணிக்கையும் கணிசமான அளவில் உயர்ந்து வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்கி இருக்கிறது.

இன்றைய நிலவரப்படி இந்தியாவில் 78,003 மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தற்போது அறிவித்திருக்கிறது. அவர்கள் தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டிருக்கும் நிலையில் கொரோனா நோய்க்கு தாக்கு பிடிக்க முடியாமல் 2,549 பேர் பலியாகி இருக்கின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,722 பேர் பாதிக்கப்பட்டு 134 பேர் உயிரிழந்துள்ளனர். நாடுமுழுவதும் கொரோனாவில் இருந்து 26,235 மக்கள் பூரண நலம் பெற்று தங்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஸ்டிரா இருக்கிறது. அங்கு கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை கடந்துள்ளது. இதுவரை அங்கு 25,922 பேர் பாதிக்கப்பட்டு 975 பேர் மரணமடைந்துள்ளனர்.

அதற்கடுத்தபடியாக குஜராத்தில் 9,267 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். இந்திய அளவில் மூன்றாவது மாநிலமாக தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 506 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,227 ஆக உயர்ந்துள்ளது. பிற மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக மத்திய, மாநில அரசுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி இருக்கின்றன.

click me!