2006 Varanasi Serial Blasts Case: வாரணாசி தொடர் குண்டுவெடிப்பு வழக்கு... குற்றவாளி வலியுல்லா கானுக்கு தூக்கு!!

By Narendran SFirst Published Jun 6, 2022, 5:47 PM IST
Highlights

வாரணாசி தொடர் குண்டுவெடிப்பில் முக்கிய குற்றவாளியான வலியுல்லா கானுக்கு மரண தண்டனை விதித்து காசியாபாத் செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வாரணாசி தொடர் குண்டுவெடிப்பில் முக்கிய குற்றவாளியான வலியுல்லா கானுக்கு மரண தண்டனை விதித்து காசியாபாத் செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2006 ஆம் ஆண்டு மார்ச் 7 ஆம் தேதி அன்று சங்கட் மோச்சக் கோவிலில் முதல் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. அடுத்த 15 நிமிடங்களுக்குப் பிறகு, வாரணாசி கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் முதல் வகுப்பு ஓய்வு அறைக்கு வெளியே மற்றொரு குண்டு வெடிப்புச் சம்பவம் பதிவானது. இந்த குண்டுவெடிப்புகளில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அதே நாளில், தஷாஷ்வமேத் காவல் நிலையம் அருகே உள்ள ரயில்வே கிராசிங்கின் தண்டவாளத்தின் அருகே குக்கர் வெடிகுண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. வாரணாசியில் உள்ள வழக்கறிஞர்கள் இந்த வழக்கை விசாரிக்க மறுத்துவிட்டனர். பின்னர் அலகாபாத் உயர்நீதிமன்றம் இந்த வழக்கை காசியாபாத் மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றியது.

குற்றவாளிக்கு எதிரான மூன்று வழக்குகளில் மொத்தம் 121 சாட்சிகள் ஆஜர்படுத்தப்பட்டனர். ஏப்ரல் 2006 இல், குண்டுவெடிப்புகளை விசாரிக்கும் சிறப்புப் பணிக்குழு, இந்த குண்டுவெடிப்பில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான வலியுல்லா, வங்காளதேசத்தை தலமைமையிடமாக கொண்ட பயங்கரவாத அமைப்பான ஹர்கத்-உல்-ஜெஹாத் அல் இஸ்லாமியுடன் தொடர்புடையவர் என்றும் குண்டுவெடிப்புகளுக்கு மூளையாக செயல்பட்டவர் வலியுல்லா என்றும் தெரிவித்தது. உத்திரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள பூல்பூரில் வசிக்கும் முகமது வலியுல்லா, குண்டுவெடிப்புக்குப் பிறகு பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

வாரணாசியில் உள்ள வழக்கறிஞர்கள் அவருக்கு ஆதரவளிக்க மறுத்ததால், காஜியாபாத்தில் அவரது வழக்குகளின் விசாரணை நடைபெற்றது. ஜூன் 4ஆம் தேதி காசியாபாத் நீதிமன்றத்தால் அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். காசியாபாத் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ஜிதேந்திர குமார் சின்ஹா, இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி)-யின் படி கொலை, கொலை முயற்சி மற்றும் சிதைத்தல் மற்றும் வெடிபொருள் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட இரண்டு வழக்குகளில் வலியுல்லாவை குற்றவாளி என்று தீர்ப்பளித்தார். இந்த நிலையில் வாரணாசி தொடர் குண்டுவெடிப்பில் முக்கிய குற்றவாளியான வலியுல்லா கானுக்கு மரண தண்டனையும் மற்றொரு வழக்கில் ஆயுள் தண்டனையும் விதித்து காசியாபாத் செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

click me!