ஆட்சிக்கு வந்தால் ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி: காங்கிரஸ் வாக்குறுதி!

By Manikanda PrabuFirst Published Mar 13, 2024, 3:04 PM IST
Highlights

ஆட்சிக்கு வந்தால் ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது

மக்களவைத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. தேர்தலில் அரசியல் கட்சிகள் வழங்கும் வாக்குறுதிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அந்த வகையில், பாரத் ஜோடோ நியாய யாத்திரை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் இளைஞர்களுக்கான ஐந்து முக்கிய வாக்குறுதிகளை அண்மையில் வெளியிட்டார்.

அதன் தொடர்ச்சியாக, மக்களவை தேர்தலை முன்னிட்டு பெண்களுக்கான ஐந்து முக்கிய வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. அக்கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, “காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மத்திய அரசுப் பணிகளில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படும். ஏழைப் பெண்களுக்கு ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் வழங்கப்படும். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள, அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்களின் ஊதியம் இரண்டு மடங்கு உயர்த்தப்படும்.” ஆகிய வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.

இனி ஐஆர்சிடிசி ரீஃபண்ட் விரைவாக கிடைக்கும்.. ஒரு மணி நேரம் போதும்.. அசத்தலான வசதி அறிமுகம்!

மேலும், “பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் உரிமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பஞ்சாயத்துக்கு ஒரு பெண் பணியாளர் நியமனம் செய்யப்படும். நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தபட்சம் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கான ஒரு விடுதி கட்டப்படும்.” என்ற வாக்குறுதியையும் காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.

முன்னதாக, “பொதுத்துறை நிறுவனங்கள் அரசு சார்ந்த நிறுவனங்கள் ஆகியவற்றில் காலியாக உள்ள 30 லட்சம் பணியிடங்கள் முன்னுரிமை அடிப்படையில் நிரப்பப்படும். 25 வயதுக்குட்பட்ட டிகிரி, டிப்ளமோ படித்த அனைத்து இளைஞர்களுக்கும் ஓராண்டு பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சியின் போது ரூ.1 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும். இது சட்டமாக்க்கப்படும். குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்ட உத்தரவாதம் வழங்கப்படும். சிறு தொழில்களைத் தொடங்கத் தயாராக இருக்கும் இளைஞர்களுக்கு ஆதரவாக ரூ.5000 கோடியில் ஸ்டார்ட்- அப் நிதி உருவாக்கப்படும்.

கிக் தொழிலாளர்கள் எனப்படும் உணவு டெலிவரி உள்ளிட்ட பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு வழங்க நாடு முழுவதும் சட்டம் இயற்றப்படும். தேர்வு தாள் கசிவு விவகாரத்தைத் தடுக்க, காகிதக் கசிவுக்கு எதிராக சட்டம் கொண்டு வரப்படும்.  அரசு போட்டித் தேர்வுகளை அரசு மட்டுமே நடத்தும், அவுட்சோர்சிங் எதுவும் இருக்காது.” என்ற இளைஞர்களுக்கான ஐந்து முக்கிய வாக்குறுதிகளை ராகுல் காந்தி வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!