மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தலைவராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நானா பட்டோலே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கூட்டணி சார்பாக உத்தவ் தாக்கரே முதல்வராக பதவி ஏற்றுள்ளார். சட்டசபையில் நேற்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 169 எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் அவர் வெற்றி பெற்றார். இந்த நிலையில் சட்டப்பேரவை தலைவருக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது.
சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் சார்பாக நானா பட்டோலே வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். மகாராஷ்டிரா மாநிலம் சக்கோலி சட்டசபை தொகுதியில் தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்று எம்.எல்.ஏ வாக இருக்கும் இவர் காங்கிரஸ் கட்சியைச் தேர்ந்தவர். ஒருமுறை பாராளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். அவர் சட்டப்பேரவை தலைவருக்கான தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.
இதே போல பாஜக சார்பாக கிஷன் கத்தோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வேட்பு மனுவும் தாக்கல் செய்தார். ஆனால் அவருக்கு போதிய உறுப்பினர்களின் ஆதரவு இல்லாத காரணத்தால் இன்று காலையில் தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றார். இதையடுத்து நானா பட்டோலே சட்டப்பேரவை தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். முறைப்படி இன்று அவர் பொறுப்பேற்றுக்கொண்டார். அதேபோல், சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக முன்னாள் முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.