திருமண தம்பதிக்கு வெடிகுண்டு கிஃப்ட்!! பிறகு நடந்த பரிதாபம்

First Published Feb 24, 2018, 10:49 AM IST
Highlights
bomb gift to marriage couple in odisha


ஒடிசா மாநிலம் பொலிங்கர் மாவட்டத்தில் திருமண பரிசுப் பொருளில் இருந்த குண்டு வெடித்ததில் மணமகன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலம், பொலிங்கர் மாவட்டம் பட்நாகர் நகரை சேர்ந்த சௌமியா சேகர் சாஹூ மற்றும் ரீமா சாஹூ ஆகிய இருவருக்கும் கடந்த 18ம் தேதி திருமணம் நடைபெற்றது.  இதையடுத்து கடந்த புதன்கிழமை அன்று (பிப்ரவரி 21) வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் புதுமண தம்பதியினருக்கு நண்பர்கள், உறவினர்கள் என பலரும் பரிசு பொருட்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். 

வரவேற்பு நிகழ்ச்சிக்குப் பிறகு தங்களுக்கு வழங்கப்பட்ட பரிசுப் பொருட்களை உறவினர்களுடன் சேர்ந்து புதுமண தம்பதியினர் நேற்று (வெள்ளிக்கிழமை) ஆவலுடன் பிரித்து பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு பரிசு பொருளை பிரித்தபோது யாரும் எதிர்பாராத விதத்தில் அந்த பரிசு பொருள் திடீரென பயங்கர சத்ததுடன் வெடித்து சிதறியது. 

இதில், மாப்பிள்ளையின் பாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். புது மாப்பிள்ளை சேகர் சாஹூ மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த மணமகள் ரீமா சாஹூ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பட்நாகர் போலீஸார், பரிசு பொருளில் வெடிகுண்டு வைத்தவர்கள் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
 

click me!