வங்கிகள் தொடர்ந்து 6 நாட்கள் வேலை நிறுத்தமா ? பரவும் வதந்தி !! உண்மை என்ன ?

By Selvanayagam PFirst Published Dec 20, 2018, 7:15 PM IST
Highlights

வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, வரும் 21ஆம் தேதி முதல் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.ஆனால் தொடந்து 5 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது  என வதந்தி கிளம்பியுள்ள நிலையில் அது உண்மை அல்ல என்று  வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

பேங்க் ஆஃப் பரோடா, தேனா வங்கி, விஜயா வங்கி ஆகிய வங்கிகளை ஒன்றாக இணைக்க, கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதற்கு வங்கி ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மூன்று வங்கிகளும் இணைக்கப்பட்டால் எஸ்பிஐ, ஹெச்டிஎஃப்சி ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக இந்த இணைப்பு வங்கி இருக்கும்.

இந் 3 வங்கிகளும் இணைக்கப்பட்டால் ஊழியர்களின் பணிப் பாதுகாப்பு பாதிக்கப்படும் என்று  ஆல் இந்தியா பேங்க் ஆபிஸர்ஸ் அசோசியேசன்  உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். வங்கிகள் இணைப்பு, பழைய ஓய்வூதியத் திட்டம், குறைந்தபட்ச ஊதியம், பணிப் பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாளை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

இதற்கு பல்வேறு சங்கங்கள் ஆதரவு அளித்துள்ளன. நாடு முழுவதும் உள்ள 3.20 லட்சம் வங்கி ஊழியர்கள் இதில் பங்கேற்கின்றனர். ஆனால், அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு (யுஎஃப்பிசி), மூன்று வங்கிகளை ஒன்றாக இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 26ஆம் தேதியன்று ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளது.

இரண்டு வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளதால், மக்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வெங்கடாச்சலம் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது மூன்று வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 26ஆம் தேதியன்று அகில இந்திய அளவில் ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது.

வரும் 21ஆம் தேதி ஒரே ஒரு சங்கம் மட்டும் இக்கோரிக்கையை வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபடுகிறது. இதனால், வங்கிப் பணிகள் பாதிப்படையாது. ஆனால் 22, 23ஆம் தேதிகளில் வங்கிகளுக்கு வழக்கமான விடுமுறையாகும்.

24ஆம் தேதி வங்கிகள் வழக்கம்போல் இயங்கும். 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் விடுமுறை மற்றும் 26ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்பதால் தொடர்ந்து இரண்டு நாட்கள் வங்கிகள் செயல்படாது. அதனால், வங்கிகள் 21ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை இயங்காது என்று பரவும் தகவல் உண்மையல்ல என்று தெரிவித்தார்.

click me!