
பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கு பாலியல் தொல்லைகள் தருவதும், இதுதொடர்பாக அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மிகுந்த வருத்தமடைந்த குழந்தைகள் மற்றும் பெண்கள் நல மேம்பாட்டு அமைச்சகம் கேட்டுக்கொண்டதன் பேரில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில்(என்.சி.இ.ஆர்.டி) இயக்குநர் ஹிருஷிகேஷ் சேனாபதி பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
மத்திய மாநில அரசு பள்ளிக்கூட பாடப்புத்தகங்களின் கடைசி பக்கத்தின் உட்பக்கத்தில் பாலியல் தொல்லைகள் குறித்த விழிப்புணர்வை குழந்தைகளிடம் ஏற்படுத்தும் விதமாக நல்ல தொடுதல் எது, கெட்ட தொடுதல் எது என்ற புரிதலை ஏற்படுத்தும் அறிவுரைகள் மாநில மொழியில் இடம்பெற்றிருக்க வேண்டும்.
அப்படியான சூழல்களில் மாணவ மாணவிகள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்ற அறிவுரைகளும் இடம்பெற்றிருக்க வேண்டும். பாலியல் தொல்லை குறித்த புகார்கள் தெரிவிக்க மற்றும் கவுன்சிலிங் பெறுவதற்கான இலவச தொலைபேசி எண்களும் இடம்பெற்றிருக்க வேண்டும். பாலியல் தொல்லையிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க கொண்டுவரப்பட்ட சட்டங்களும் இடம்பெற்றிருக்க வேண்டும்.