
இந்தியாவில் ஆட்டோ கட்டணத்தைவிட விமான கட்டணம் குறைவாக உள்ளது என்று விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா கூறியுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில், 27-வது சர்வதேச மேலாண்மை கருத்தரங்கு நடைபெற்றது. இதில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, இந்தியாவில் ஆட்டோ கட்டணத்தைவிட விமான கட்டணம் குறைவாக உள்ளது என்றார். நான் முட்டாள்தனமாக பேசுவதாக சிலர் கூறுவார்கள். ஆனால் இது உண்மை.
இந்தூரில் இருந்து டெல்லி செல்ல விமானங்களில் ஒரு கிலோ மீட்டருக்கு பயணிகள் ரூ.5 மட்டுமே கட்டணமாக செலுத்துகின்றனர். ஆனால், நகரில் ஒரு ஆட்டோவை வாடகைக்கு எடுத்தால், ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.8 முதல் ரூ.10 வரை செலுத்த வேண்டிய நிலை உள்ளதாக கூறினார்.
உலகிலேயே இந்தியாவில்தான் விமான கட்டணம் குறைவு என்பதால் பலரும் விமானங்களில் பயணம் செய்வதை விரும்புகின்றனர். சாதாரண செருப்பு அணியும் சாதாரண மனிதர்கள்கூட தற்போது விமானங்களில் பறக்கின்றனர் என்று அருண் ஜெட்லி சுட்டிக்காட்டியுள்ளார்.
4 ஆண்டுகளுக்கு முன்பு விமானங்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை 11 கோடியாக இருந்தது. அது தற்போது 20 கோடியாக உயர்ந்துள்ளது. இதனை மேலும் அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. எதிர்காலத்தில் 5 மடங்காக்கி 100 கோடியாக உயர்த்தப்படும் என்றும் கூறினார். புதிய கண்டுபிடிப்புகள் மூலம் சாதாரண மக்களுக்கும் அனைத்து வசதிகளும் கிடைக்கச் செய்து அமெரிக்கா, சீனா போன்ற பெரும் பொருளாதார நாடுகளை முந்த வேண்டும் என்றும் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா கூறினார்.