
பண்டிகை நாட்களில் ரெயிலில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள், கீழ்தளப் படுக்கையை தேர்வு செய்தால், அதிகமான கட்டணம் செலுத்த வேண்டியது வரும்.
ரெயில்வே வாரியத்தின் கட்டண மறு ஆய்வு குழு அளித்த பரிந்துரையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளிக்கும் நிலையில் இனி அதிக கட்டணம் செலுத்த வேண்டியது இருக்கும்.
பிரிமியம் ரெயிலில் டிக்கெட் கட்டணத்தில் பிளக்சி பேர் முறையை ஆய்வு செய்ய ரெயில்வே வாரியம் சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டது.
இந்த ரெயில்வே ஆய்வுக் குழுவில் ரெயில்வே வாரிய அதிகாரிகள், நிதி ஆயோக் ஆலோசகர் ரவிந்தர் கோயல், ஏர் இந்தியா வருவாய் மேலாண்மையின் இயக்குநர் மீனாட்சி மாலிக், பேராசிரியர் எஸ். ஸ்ரீராம் உள்ளிட்ட பலர் உள்ளனர். இந்த குழுவினர் தங்களின் பரிந்துரையை நேற்று முன்தினம் அளித்தனர்.
அந்த பரிந்துரையில் முக்கியமாக விமானங்கள், ஓட்டல்களில் பின்பற்றப்படும் கட்டண முறைபோல் பின்பற்றலாம் எனத் தெரிவித்து இருந்தது.
அதாவது சீசன் நேரத்தில் கூட்டம் அதிகரிக்க, அதிகரிக்க அதிக கட்டணமும், சீசன் இல்லாத நேரத்தில் குறைந்த கட்டணமும் விதிக்கலாம் எனத் தெரிவித்தது.
விமானங்களில் முதல் வரிசை இருக்கை தேவை என்று கேட்டுப் பெறும்போது அதிகமான பணம் டிக்கெட்டுக்கு செலவிட வேண்டும். அதேபோல், சீசன் நேரத்தில், ரெயிலில் ‘கீழ்தளப்படுக்கை’ தேவை என முன்பதிவில் குறிப்பிடும்போது, கூடுதல் கட்டணம் வசூலிக்கலாம் எனப் பரிந்துரை செய்தது.
அதுமட்டுமல்லமல், ஒரே வழித்தடத்தில் அதிகமான ரெயில்கள் இயக்கப்படும்போது, வசதியான நேரத்தில் குறிப்பிட்ட நகரை வந்தடையும் ரெயிலுக்கு அதிகமான கட்டணமும், மற்ற நேரங்களில் வரும் ரெயிலுக்கு குறைந்த கட்டணம், அல்லது பயணிகளின் டிக்கெட்டில் தள்ளுபடியும் அளிக்க பரிந்துரை செய்தது.
உதாரணமாக, மதுரைக்கு ஒரு ரெயில் நள்ளிரவு 12 மணிக்கு வந்து சேரும் போது குறைந்த கட்டணமும், அதுவே அதிகாலை 3 மணிக்கு வந்துசேர்ந்தால் அல்லது கடந்து சென்றால் சிறிது அதிகமாகவும், காலையில் 6 மணிக்கு அடைந்தால் அதிக கட்டணம் வசூலிக்கலாம் எனப் பரிந்துரை செய்யப்பட்டது.
நள்ளிரவு நேரங்களில் குறிப்பிட்ட நகரை அடையும் அல்லது கடந்து செல்லும் ரெயிலை தேர்வு செய்யும் பயணிகளுக்கு டிக்கெட்டில் தள்ளுபடியும் தர பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும், ரெயில்களில் ஒரே மாதிரியான கட்டண முறையை கடைபிடிக்காமல், பண்டிகை நாட்கள், சீசன் நாட்கள், விடுமுறை நாட்களில் ரெயில்களில் அதிக டிக்கெட் கட்டணமும், மற்ற சாதாராண நாட்களில் மிகக் குறைந்த கட்டணமும் வசூலிக்கலாம் எனப் பரிந்துரை செய்துள்ளது.