
டிசம்பர் 31-ந் தேதிக்குள் ஆதார் எண்ணை, வங்கிக்கணக்குடன் இணைக்காவிட்டால், தற்காலிகமாக முடிக்கப்படும். காலக்கெடு நீட்டிக்கப்படாது என ஆதார் வழங்கும் ‘உதய்’ அமைப்பு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
கட்டாயம்
நாட்டில் கருப்பு பணத்தை கட்டுப்படுத்தவும், சட்டவிரோத பணப்பரிமாற்றத்தை தடுக்கவும் வங்கிக்கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கி உள்ளது.
மேலும், பான் கார்டுடன், ஆதார் எண்ணை இணைப்பதையும் கட்டாயமாக்கி சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதற்கான காலக்கெடு இம்மாதம் 31-ந் தேதியாக இருந்த நிலையில், 2018ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதியாகமாற்றப்பட்டுள்ளது.
நீட்டிப்பா?
ஆனால், வங்கிக்கணக்கு, பரஸ்பர நிதி மற்றும் காப்பீடுகளில் இணைப்பதற்கு வரும் 31-ந்தேதி கடைசியாகும். இந்த காலக்கெடு நீட்டிக்கப்படுமா என ஆதார் வழங்கும் உதய் அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவரிடம் கேள்வி முன்வைக்கப்பட்டது.
வங்கிக்கணக்கு முடக்கப்படும்
அதற்கு அவர் பதில் அளிக்கையில், “ வங்கிக்கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு காலக்கெடு இம்மாதம் 31-ந்தேதியுடன் முடிகிறது. இந்த அவகாசத்தை நீட்டிக்கக் கோரி மத்திய அரசிடம் இருந்து எந்த விதமான உத்தரவும் இதுவரை பிறப்பிக்கவில்லை.
அவ்வாறு 31-ந்தேதிக்குள் ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைக்காதவர்களின் கணக்கு தற்காலிகமாக முடக்கி வைக்கப்படும். ஆதார் எண் இல்லாதவர்கள், ஆதார் மையத்தில் பதிவு செய்து, அந்த பதிவு எண்ணை வங்கியில் அளித்த பின், மீண்டும் வங்கிக்கணக்கு செயல்பாட்டுக்கு அனுமதிக்கப்படும்’’ எனத் தெரிவித்தார்.