எகிறப்போகுது கேன் தண்ணீர், கூல்ட்ரிங்க்ஸ் விலை - ஜி.எஸ்.டி.யில் 40 சதவீதம் வரி

First Published Mar 17, 2017, 4:08 PM IST
Highlights
40 percent tax for cool drinks water


நாடுமுழுவதும் விரைவில் நடைமுறைக்கு வர இருக்கும் ஜி.எஸ்.டி. வரியில், சுத்திகரிக்கப்பட்ட கேன் வாட்டர், மினரல் வாட்டர், குளிர் பானங்கள், ஆடம்பர பொருட்கள், சொகுசு கார்கள் ஆகியவற்றுக்கு 28 சதவீதம் வரி போக கூடுதலாக 15 சதவீதம் வரி விதிக்க ஜி.எஸ்.டி. கவுன்சில்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதனால், இந்த பொருட்களின் விலை கடுமையாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஜி.எஸ்.டி. வரியின் 5 வரைவு மசோதாக்களுக்கு ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ளதால், ஜூலை 1-ந்தேதி நடைமுறைக்கு வருவது ஏறக்குறைய உறுதிசெய்யப்பட்டுள்ளது. 



ஜி.எஸ்.டி. வரி

நாடு முழுவதும் நேரடி, மறைமுக வரிகளுக்கு மாற்றாக, சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) என்ற ஒரே வரியை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான மசோதா, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறி விட்டது.

கவுன்சில்

இந்த வரிவிதிப்பு குறித்த அனைத்து அம்சங்களையும் இறுதி செய்வதற்காக, நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தலைமையில் மாநில நிதி அமைச்சர்கள் அடங்கிய ஜி.எஸ்.டி. கவுன்சில்அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை நடந்த 11 கூட்டங்களில் 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என 4 வகையான ஜி.எஸ்.டி. வரி விதிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. 

ஜி.எஸ்.டி. வரியை அமல்படுத்துவதால், மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்ட 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு வழங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

12-வது கூட்டம்

இந்நிலையில் 12-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் டெல்லியில் நிதி அமைச்சர் அருண் ஜெட்லிதலைமையில் நடந்தது. இதில் அனைத்து மாநிலங்களின் நிதி அமைச்சர்கள் கலந்து கொண்டு தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர். 



இந்த கூட்டத்துக்கு பின், நிதி அமைச்சர் அருண் ஜெட்லி நிருபர்களிடம் பேசியதாவது-

ஜூலை 1 நடைமுறை

12-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தின் முடிவில் யூனியன் பிரதேசங்களுக்கான ஜி.எஸ்.டி. வரைவு மசோதாவுக்கும், மாநிலங்களுக்கான ஜி.எஸ்.டி. வரைவு மசோதாவுக்கும் ஒப்புதல் கிடைத்துள்ளது.  ஜூலை 1-ந்ேததி முதல் நாடுமுழுவதும் ஜி.எஸ்.டி. வரி நடைமுறைக்கு வரும் என நம்புகிறேன்.

5 ஆண்டுகளுக்கு இழப்பு

 ஜி.எஸ்.டி. வரியை மாநில அரசுகள் நடைமுறைப்படுத்துவதால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்ட ஒரு நிதித் தொகுப்பு உருவாக்கப்பட உள்ளது. இந்த நிதித்தொகுப்பு மூலம், அடுத்த 5 ஆண்டுகளுக்கு மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை வழங்கும்.

கூடுதலாக 15 சதவீதம்

அதாவது, சொகுசு கார், குளிர்பானங்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஆகியவற்றுக்கு ஜி.எஸ்.டி.யில்அதிகபட்சமாக 28 சதவீதம் வரி விதிக்கப்பட உள்ளது. இவற்றுக்கு கூடுதல் வரியாக 15 சதவீதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவை இரண்டையும் கூட்டினால் 40 சதவீத வரிக்கு மேல் சென்றாலும், அது 40 சதவீதம் வரி அளவிலேயே கணக்கிடப்படும்.

புகையிலை பொருட்கள்

மேலும், பான் மசாலா, புகையிலை, குட்கா போன்ற பொருட்களுக்கு 135 சதவீதம் கூடுதல் வரியும், 1000 சிகரெட்களுக்கு ரூ.4,170 வரியும், நிலக்கரி டன் ஒன்றுக்கு ரூ.400 வரியும் விதிக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், பீடிகளுக்கு விதிக்கப்படும் வரி குறித்து முடிவு எடுக்கப்படவில்லை.

இவ்வகையான பொருட்கள் மீது விதிக்கப்படும் கூடுதல் வரியின் மூலம் கிடைக்கும் நிதியை வைத்து, மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்டுவோம் எனத் தெரிவித்தார்.

click me!