
மருத்துவமனையில் செல்போனில் டாக்டர் கூறிய ஆலோசனைபடி கம்போண்டர் சிகிச்சை அளித்ததால் 1½ வயது சிறுவன் பரிதாபமாக இறந்தான்.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் பாட்டிகுளத்தை சேர்ந்தவர் சுனில் குமாரின் மகன் அபிதேவ் (1½ வயது). நேற்று முன்தினம் இரவு சிறுவன் வயிற்றுவலியால் துடித்ததால் அவனது பெற்றோர் சித்தூர் விளையோடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். நள்ளிரவில் ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் இல்லாததால் மருத்துவமனை ஊழியர்கள் சிறுவனை மீட்டு படுக்கையில் படுக்க வைத்து. பின்னர் போன் மூலம் டாக்டரை தொடர்பு கொண்டு ஆலோசனை கேட்டனர்.
டாக்டரின் ஆலோசனையின்படி ஊழியர்கள் சிறுவனுக்கு சுமார் ஒரு மணிநேரமாக சிகிச்சை அளித்தனர், சிறுவனின் உடல் நிலைமை மேலும் மோசமானதால் மகனின் நிலைமையை கண்ட பெற்றோர் வேறு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்செல்ல முயன்றனர். ஆனால் ஊழியர்கள் விடவில்லை. இந்நிலையில் நேற்று அதிகாலை அபிதேவ் பரிதாபமாக பலியானான்.
இதனையடுத்து, செல்போன் மூலம் டாக்டரின் ஆலோசனையின் பேரில் தனது மகனுக்கு ஊழியர்கள் சிசிச்சை அளித்ததால் தான் இறந்தான் என்று தனது ஊர்ப்பொதுமக்களிடம் கூறி கதறி அழுதார். இதனால் அதிர்ச்சியடைந்த ஊர்ப்பொதுமக்கள் மருத்துவமனைக்கு வந்து சிறுவன் இறந்தது குறித்து கேட்டதால் மருத்துவமனை ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஆஸ்பத்திரி கண்ணாடி மற்றும் கட்டிடங்களை அடித்து நொறுக்கினர். பின்னர் அங்கு நிறுத்தப்பட்ட 2 கார் மற்றும் ஒரு பஸ்சை அடித்து நாசமாக்கினர்.
தகவல் அறிந்து வந்த போலீசார் அங்கு வந்து பொதுமக்களை சமாதானம் செய்தனர். பின்னர் இது குறித்து மீனாட்சிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனின் உடலை மீட்டு பிரேத திருச்சூர் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.