பொருளாதாரச் சீரழிவு, உள்நாட்டு அரசியல் குழப்பம், எல்லையில் போர் எனச் சுழற்றி அடிக்கப்படும் சுழலில் சிக்கியிருக்கும் பாகிஸ்தான், இப்போது ஒரு விபரீதமான தற்கொலை முயற்சியில் இறங்கியுள்ளது. ஆப்கானிஸ்தான் தலிபான்களுடன் மூண்டுள்ள மோதலைத் தணிக்க, சர்வதேச அளவில் தேடப்படும் மூன்று பயங்கரவாதிகளை அமைதித் தூதர்களாக காபூலுக்கு அனுப்பியுள்ளது பாகிஸ்தான். வேலியே பயிரை மேய்ந்த கதை என்பது போல, பயங்கரவாதத்தை வளர்த்தவர்களையே வைத்து அமைதி பேச முற்படுவது பாகிஸ்தானின் கையறு நிலையைக் காட்டுகிறது.
பாகிஸ்தான் அனுப்பியுள்ள அந்த மூன்று 'மதத் தலைவர்கள்' (பாகிஸ்தான் அரசு இவர்களை இப்படித்தான் அழைக்கிறது) சாதாரணமானவர்கள் அல்ல. அவர்கள் கைகளில் படிந்திருப்பது இரத்தக் கறை.
ஃபஸ்லூர் ரெஹ்மான் கலீல்: ஒரு காலத்தில் ஒசாமா பின்லேடனின் வலது கையாகச் செயல்பட்டவர். ஹர்கத்-உல்-முஜாஹிதீன் அமைப்பின் தலைவராக இருந்து, தற்போது காஷ்மீர் எல்லையில் பயங்கரவாதிகளுக்குப் பயிற்சி அளிக்கும் மதரஸாக்களை நடத்தி வருகிறார்.
அப்துல்லா ஷா மஜார்: இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதி மசூத் அசாருக்கு மிகவும் நெருக்கமானவர். ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் நிழலில் வளர்ந்த இவர், தலிபான் தலைவர்களுடன் நெருக்கமான உறவு கொண்டவர் என்பதால் தூதராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
காரி சஜித் உஸ்மான்: சோவியத் யூனியனுக்கு எதிரான போரில் தலிபான்களுக்குத் துணை நின்றவர். பழைய உறவுகளைப் புதுப்பித்து தலிபான்களைச் சமாதானப்படுத்த இவர் அனுப்பப்பட்டுள்ளார்.