ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயம் (பூலோக வைகுண்டம்)
வைணவத் தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கத்தில், வைகுண்ட ஏகாதசி 21 நாட்கள் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. அன்று அதிகாலை 'ரத்ன அங்கி' அணிந்து நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு, சொர்க்கவாசல் வழியாக வரும் காட்சி சிலிர்ப்பூட்டும். இது மனித ஆன்மா உலக மாயைகளைக் கடந்து இறைவனை அடைவதைக் குறிக்கிறது.
திருமலை திருப்பதி வெங்கடாசலபதி ஆலயம்
திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி அன்று 'வைகுண்ட துவாரம்' எனப்படும் கதவுகள் திறக்கப்படுகின்றன. ஏகாதசி மற்றும் அதற்கு அடுத்த நாளான துவாதசி ஆகிய இரு தினங்கள் மட்டுமே இந்த வாசல் திறந்திருக்கும். ஏழுமலையானை இந்தத் துவாரத்தின் வழியாக வலம் வந்து தரிசிப்பது, ஏழு பிறவிகளில் செய்த பாவங்களை நீக்கும் என்பது நம்பிக்கை.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ஆலயம்
சென்னையில் உள்ள புகழ்பெற்ற இந்தத் தலத்தில், மகாபாரதப் போரில் அர்ஜுனனுக்கு கீதையை உபதேசித்த பார்த்தசாரதிப் பெருமாள் எழுந்தருளியுள்ளார். இங்கு சொர்க்கவாசல் திறப்பின் போது, பெருமாள் சூரியப் பிரபையில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சி தருவார். ஸ்ரீரங்கத்தைப் போலவே இங்கும் பகல் பத்து மற்றும் ராப்பத்து உற்சவங்கள் மிகச் சிறப்பாக நடைபெறும்.