Sri Narayana Guru: பெரியாருக்கு முன்பே சாதிக்கு எதிராக நின்ற சாமானியன்.! யார் இந்த ஸ்ரீநாராயண குரு! மணிமண்டபம் கோரிக்கை விடுத்த சீடர்கள்.!

Published : Aug 28, 2026, 06:11 PM IST

சமூக சீர்திருத்தவாதியான ஸ்ரீநாராயண குரு, "ஒரு ஜாதி, ஒரு மதம், ஒரு கடவுள்" என்ற கொள்கையை வலியுறுத்தினார். தற்போது, கன்னியாகுமரி மருந்துவாழ் மலையில் அவருக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.

PREV
14
சமூகத்தை நல்வழிப்படுத்திய நல்லவர்

சாதி, மத வேறுபாடுகளால் சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் நிலவிய காலகட்டத்தில், மனிதர்களிடையே சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் வலியுறுத்திய ஆன்மிகத் தலைவர்களில் முக்கியமானவர் ஸ்ரீநாராயண குரு. “ஒரு ஜாதி, ஒரு மதம், ஒரு கடவுள் மனிதனுக்கு” என்ற சிந்தனையை முன்வைத்து, ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட அவரது வாழ்க்கை இன்றும் சமூக சீர்திருத்தத்தின் முக்கிய அத்தியாயமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கன்னியாகுமரி மருந்துவாழ் மலையில் ஸ்ரீநாராயண குருவுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது கவனம் பெற்றுள்ளது.

24
யார் இந்த ஸ்ரீநாராயண குரு?

கேரளத்தைச் சேர்ந்த ஸ்ரீநாராயண குரு, ஆன்மிகத் துறையில் மட்டுமின்றி சமூக சீர்திருத்தத்திலும் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றவர். சாதியின் பெயரால் மனிதர்களை பிரித்து வைத்திருந்த காலத்தில், மனிதர்களின் பிறப்பை அடிப்படையாகக் கொண்டு உயர்வு, தாழ்வு பார்ப்பதை அவர் கடுமையாக எதிர்த்தார்.

கல்வி, தூய்மை, ஒழுக்கம், தொழில் மற்றும் அமைப்பு ஆகியவற்றின் மூலம் சமூக முன்னேற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தினார். ஆன்மிகத்தை சமூக மாற்றத்துடன் இணைத்த அவரது செயல்பாடுகள், பின்னாளில் பல்வேறு சமூக சீர்திருத்த இயக்கங்களுக்கு ஊக்கமாக அமைந்தன.

ஸ்ரீநாராயண குரு கேரளத்தில் பிறந்தவராக இருந்தாலும், அவரது சிந்தனைகளுக்கு தமிழ்நாட்டிலும் தனி மரியாதை உள்ளது. தமிழ் மொழி மற்றும் இலக்கியத்தின் மீதும் அவர் ஆர்வம் கொண்டிருந்ததாக அவரது ஆதரவாளர்கள் குறிப்பிடுகின்றனர். தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட தமிழ் பக்தி இலக்கியங்களிலும் அவருக்கு ஆழ்ந்த ஈடுபாடு இருந்ததாக கூறப்படுகிறது.

34
மகாத்மா காந்தி, தாகூர் பாராட்டு

ஸ்ரீநாராயண குருவின் சிந்தனைகள் அவருடைய காலத்தில் பல முக்கிய தலைவர்களின் கவனத்தையும் ஈர்த்தன. மகாத்மா காந்தி அவரை சந்தித்து உரையாடியதும் குறிப்பிடத்தக்க வரலாற்று நிகழ்வாக பார்க்கப்படுகிறது. அதேபோல், கவிஞரும் தேசிய கீதத்தை இயற்றியவருமான ரவீந்திரநாத் தாகூரும் ஸ்ரீநாராயண குருவை சந்தித்து அவரது ஆளுமையைப் பாராட்டியதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சாதி வேறுபாடுகளுக்கு எதிராக குரல் கொடுத்து, மனிதர்களின் சமத்துவத்தை முன்னிறுத்திய அவரது வாழ்க்கை, ஆன்மிகத்தையும் சமூகப் பொறுப்பையும் இணைத்த ஒரு முன்னுதாரணமாக கருதப்படுகிறது.

44
மணிமண்டபம் அமைக்க கோரிக்கை

இந்த நிலையில், ஸ்ரீநாராயண குருவின் 172-வது ஜெயந்தி விழா, கன்னியாகுமரி மருந்துவாழ் ஸ்ரீநாராயண குரு தர்ம மடத்தில் நடைபெற்றது. அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கம் (எய்ம்பா) சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைவர் ஓம்சக்தி ராமச்சந்திரன் தலைமை வகித்தார். மாநில பொருளாளர் ரவி முதலியார் முன்னிலை வகித்தார்.

விழாவில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் பூஜைகள் நடைபெற்றதுடன், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் ஸ்ரீநாராயண குருவுக்கு மலர் அஞ்சலி செலுத்தினர். மேலும், நிகழ்ச்சியில் புத்தகமும் வெளியிடப்பட்டது.

இதில் பேசிய மாநில தலைவர் ஓம்சக்தி ராமச்சந்திரன், ஸ்ரீநாராயண குருவின் ஜெயந்தி நாளில் தமிழக அரசு மரியாதை செலுத்துவதுடன், தமிழ்நாடு முழுவதும் விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மேலும், அவர் சித்தியடைந்ததாகக் கூறப்படும் மருந்துவாழ் மலையில் அவரது பெருமையை போற்றும் வகையில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அதற்குத் தேவையான உதவிகளை வழங்க தங்கள் அமைப்பு தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

சாதி வேறுபாடுகளுக்கு எதிராக மனிதநேயத்தையும் சமத்துவத்தையும் வலியுறுத்திய ஸ்ரீநாராயண குருவின் நினைவைப் போற்றும் வகையில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை, தற்போது மீண்டும் சமூக கவனத்தை ஈர்த்துள்ளது. அவரது வாழ்க்கை மற்றும் சிந்தனைகள் அடுத்த தலைமுறையினருக்கும் அறிமுகமாக வேண்டும் என்பதே இந்தக் கோரிக்கையின் முக்கிய நோக்கமாக அமைந்துள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories