இந்த நிலையில், ஸ்ரீநாராயண குருவின் 172-வது ஜெயந்தி விழா, கன்னியாகுமரி மருந்துவாழ் ஸ்ரீநாராயண குரு தர்ம மடத்தில் நடைபெற்றது. அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கம் (எய்ம்பா) சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைவர் ஓம்சக்தி ராமச்சந்திரன் தலைமை வகித்தார். மாநில பொருளாளர் ரவி முதலியார் முன்னிலை வகித்தார்.
விழாவில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் பூஜைகள் நடைபெற்றதுடன், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் ஸ்ரீநாராயண குருவுக்கு மலர் அஞ்சலி செலுத்தினர். மேலும், நிகழ்ச்சியில் புத்தகமும் வெளியிடப்பட்டது.
இதில் பேசிய மாநில தலைவர் ஓம்சக்தி ராமச்சந்திரன், ஸ்ரீநாராயண குருவின் ஜெயந்தி நாளில் தமிழக அரசு மரியாதை செலுத்துவதுடன், தமிழ்நாடு முழுவதும் விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மேலும், அவர் சித்தியடைந்ததாகக் கூறப்படும் மருந்துவாழ் மலையில் அவரது பெருமையை போற்றும் வகையில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அதற்குத் தேவையான உதவிகளை வழங்க தங்கள் அமைப்பு தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
சாதி வேறுபாடுகளுக்கு எதிராக மனிதநேயத்தையும் சமத்துவத்தையும் வலியுறுத்திய ஸ்ரீநாராயண குருவின் நினைவைப் போற்றும் வகையில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை, தற்போது மீண்டும் சமூக கவனத்தை ஈர்த்துள்ளது. அவரது வாழ்க்கை மற்றும் சிந்தனைகள் அடுத்த தலைமுறையினருக்கும் அறிமுகமாக வேண்டும் என்பதே இந்தக் கோரிக்கையின் முக்கிய நோக்கமாக அமைந்துள்ளது.