இந்துக்களையும், முஸ்லிம்களையும் பிரிக்க நினைக்கும் திமுகவின் நோக்கம் தவிடுபொடியாகும்... ஜமாஅத் தலைவர் பாய்ச்சல்..!

By Thiraviaraj RMFirst Published Dec 21, 2019, 3:10 PM IST
Highlights

இந்துக்களையும், முஸ்லிம்களையும் பிரிக்க நினைத்தால் உங்களுடைய நோக்கம் தவிடுபொடியாகும் என தமிழ் நாடு ஏகத்துவ பிரச்சார ஜமாஅத் தலைவர் வேலூர் இப்ராஹிம் ஆவேசப்பட்டுள்ளார். 

இதுகுறித்து அவர், ‘’ஒரு உண்மையான முஸ்லீம் யாருக்கும் கட்டுப்பட வேண்டும் தெரியுமா? இந்த தேசத்தின் அமீருக்குக் கட்டுப்பட வேண்டும். இந்த தேசத்தின் அமீராக இருக்கக்கூடியவர் நம்முடைய பாரத பிரதமர் மோடி ஆகும்.

அவருடைய எந்த பேச்சில் எப்போதாவது தான் ஒரு இந்துக்களுக்கான பிரதமர் என்று வெளிப்படுத்தி இருக்கிறாரா? அல்லது இந்துக்களுக்கான உரிமையை மட்டும் தான் நான் தருவேன் என்று சொல்லியிருக்கிறாரா? காங்கிரஸ் வேண்டுமானால் முஸ்லிம்களுடைய மேடையில் ஏறும் போது இது முஸ்லிம்களுக்கான கட்சி என்று நாடகமாடும். திமுக வேண்டுமானால் மேடைக்கேற்ப நாடகமாடும்.


 
பாரதப் பிரதமர், ஒரு வாக்குறுதி கொடுத்தார்கள். அது என்ன வாக்குறுதி? அனைவருக்குமான முன்னேற்றம். அனைவருக்குமான வளம். இந்த தேச முன்னேற்றத்தில் அனைவருக்கும் பங்கு இருக்கிறது. இங்கு இந்துக்களையும், முஸ்லிம்களையும் பிரிக்க நினைத்தால் உங்களுடைய நோக்கம் தவிடுபொடியாகும்.

முஸ்லிம்களின் கவனத்தை எப்படி திசை திருப்புகிறார்கள். 1971-க்கு பிறகு என்.ஆர்.சி கொடுக்கப்படும். தேசிய குடியுரிமை திருத்த சட்டம் எப்படி இந்துக்களுக்கானதாக இருக்கிறதோ, எப்படி கிறிஸ்தவர்களுக்காக இருக்கிறதோ, எப்படி சீக்கிய மக்களுக்கு ஆதரவாக இருக்கிறதோ, அதுபோன்று என்.ஆர்.சி கொண்டுவரப்படும். அதில் 1971-க்கு பிறகு உங்களுடைய ஆதாரங்களை கேட்பார்கள். முஸ்லிம்களிடத்தில் இல்லை. அப்போது என்ன நடக்கும்? இந்த தேசத்தில் உள்ள 25 கோடி மக்கள் அனாதையாகப் படுவார்கள். அகதிகளாக்கப்படுவார்கள். இப்படி திரும்பத் திரும்ப காங்கிரசும், திமுகவும் தங்களுடைய விஷம பிரச்சாரத்தை செய்துகொண்டிருக்கிறது. 

இதனால், அப்பாவி முஸ்லிம்கள் பதறிக் கொண்டிருக்கிறார்கள். பயந்து கொண்டிருக்கிறார்கள். பள்ளிவாசல்களில் இஸ்லாமிய நெறிகளை போதிக்க வேண்டிய இடத்தில், இந்த நாட்டில் வாழ்வதற்கு அச்ச நிலையை ஏற்படுத்தும் இடமாக இன்றைக்கு மாறி உள்ளது. இதனை காங்கிரசும், திமுகவும் அதனுடைய தொண்டரடிகள் என்று சொல்லக்கூடிய பூஜாக்களும் தூக்கிக் கொண்டு இருக்கிறார்கள்.

குடியுரிமை திருத்த சட்டம் மட்டுமல்ல. நமது பாரத பிரதமரால் கொண்டு வரப்படும் எந்த திட்டமாக இருந்தாலும் இந்த தேசத்தில் உள்ள முஸ்லிம்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. இவர்கள் சொல்கிறார்கள், இந்து குடியுரிமை தடைச் சட்டத்தை ஆதரித்தால் அதன்பிறகு என்.ஆர்.சி வரும். அதை இப்படித்தான் கொண்டுவருவார்கள் என்று சந்தேகப்படுகிறோம் என்கிறார்கள். பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு முத்தலாக் தடை சட்டத்தை கொண்டு வந்து விட்டார்கள். காஷ்மீருக்கு தனி அந்தஸ்து வழங்கிய 370, 35A சட்டப்பிரிவை ரத்து செய்து விட்டார்கள். இதோ குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வந்துவிட்டார்கள். அப்படி இருக்கும்போது என்.ஆர்.சி கொண்டுவந்து, அதன்மூலம் ஏன் முஸ்லிம்களை ஒதுக்க மாட்டார்கள் என்று கேட்கிறார்கள்.

இதற்கு இஸ்லாமியர்கள் தரப்பிலிருந்து நான் பதில் சொல்கிறேன். முத்தலாக் தடை சட்டம் என்பது இஸ்லாத்திற்கு எதிரானதா? திருக்குர்ஆனுக்கு எதிரானதா? நபிகள் நாயகத்திற்கு எதிரானதா? இல்லை யாராவது இது பற்றி விவாதிக்க முடியுமா? திருக்குர்ஆன் சொல்கிறது முத்தலாக் என்பது, 3 முறை கொடுக்கப்படவேண்டும். இதை புரியாமல் ஒரே நேரத்தில் மூன்று தலாக் சொல்லி அந்தப் பெண்களை பாதிப்புக்கு உள்ளாக்கினார்கள். அந்தப் பெண்கள் எங்கே செல்வார்கள்? மதத்தின் பெயராலும், இனத்தின் பெயராலும், நடக்கக்கூடிய அத்தனை கொடுமைகளையும் ஒழிப்பதற்காக வந்தவர் நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி. பெண்களுக்கான உரிமையை தந்தவர் பாரதபிரதமர். எது இஸ்லாத்துக்கு எதிரானது?

அரபு நாடுகளுக்கு நீங்கள் சென்று பார்க்கலாம். முத்தலாக் நடைமுறையில் உள்ளதா? இங்கு யார் கருதுகிறார்களோ அவர்கள் அரபு நாடுகளுக்கு சென்று பார்க்கட்டும். அங்கு இது கிடையாது. அப்படியானால் ஏன் இந்த பொய் பிரச்சாரத்தை செய்கிறீர்கள்? அதேபோன்று 370 ஐ ரத்து செய்தார்கள். இது முஸ்லிம்களுக்கு எதிரானதா?

இந்துக்களை விடுங்கள், முஸ்லிமான நான் ஆசைப்பட்டேன், காஷ்மீருக்கு செல்ல வேண்டுமென்று. அங்குள்ள இயற்கை வளங்களை பார்க்க வேண்டும், அந்த சந்தோஷத்தை அனுபவிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஒரு இந்திய குடிமகனாக, ஒரு இஸ்லாமியனாக நான் காஷ்மீருக்கு சென்று பார்க்க வேண்டும் என்று நினைத்தாலும் அது முடியாது. ஏன் தெரியுமா? எங்கு குண்டு போடுவான்? எப்ப சுடுவான்? யார் தாக்கும் நடத்துவான்? அந்த அச்சம் இருந்தது. ஆனால் இன்றைக்கு அந்த அச்சம் இல்லை. இந்த தேசத்தின் எந்த குடிமகனும் இன்று தைரியமாக காஷ்மீர் சொல்லமுடியும். காஷ்மீர் என்பது எங்கள் மண், எங்கள் தேசத்தின் மண் என்று சொல்ல முடியும். தைரியமாக அங்கு போகலாம். காஷ்மீர் வளங்களை பார்க்கலாம். அந்த மக்களோடு உறவாடலாம்.

370 என்பது முஸ்லிம்களுக்கு உரியதா? அங்கு இந்துக்கள் இல்லையா? பவுத்தர்கள் இல்லையா? பிற சமூகத்தவர்கள் இல்லையா? இது தேசத்திற்கான சட்டம். இந்த தேசத்தின் ஒரு பகுதி காஷ்மீர். அதை யாரும் மறுக்க முடியாது. அப்படியானால் அது இஸ்லாமியர்களுக்கு எதிரானது இல்லை. அது ஒரு திட்டமிட்ட பொய்ப் பிரச்சாரம்.

உங்கள் அரசியல் சுயநலத்திற்காக இன்றைக்கு முஸ்லிம்களை முன்னிறுத்துகிறீர்கள்.. லத்தி சார்ஜ், துப்பாக்கி சூடு, பலி, ரத்தத்தோடு, காயத்தோடு, நாளை அவன் அனாதை அகப்படுவான். இவர்கள் இந்த சுயநலத்தோடு இந்த காட்சிகளை பயன்படுத்தி குறிப்பாக தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சியை எதிர்த்து, பாஜகவை எதிர்த்து வாக்கு வங்கிக்காக செய்யக்கூடிய செயல்தான் இந்த போராட்டங்கள். தமிழகத்தில் திமுகவை புறக்கணிப்போம். தேசிய அளவில் காங்கிரசை புறக்கணிப்போம். இந்த தேசத்தை வலுப்படுத்துவோம்’’ எனத் தெரிவித்தார்.

click me!