எம்.ஜி.ஆர். மறைவிற்குப் பின், ஜெயலலிதா பொதுச் செயலாளரான பிறகு 1989-ல் தொடங்கி இதுவரை 9 சட்டமன்றத் தேர்தலை இந்த தொகுதி சந்தித்திருக்கிறது. இதில் 2011 ஜெயலலிதா போட்டியிட்டதைத் தவிர்த்து, மீதி 8 தேர்தல்களில் முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்தான் அ.தி.மு.க. சார்பாக போட்டியிட்டனர்.
முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் 3 முறையும், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி 2 முறையும், முன்னாள் அமைச்சர் கே.கே.பாலசுப்பிரமணின் ஒருமுறையும், முன்னாள் அமைச்சர் எஸ்.வளர்மதி 2 முறையும் என ஆகமொத்தம் 8 முறை அ.தி.மு.க.வில் உள்ள முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்தான் வேட்பாளர்களாக போட்டியிட்டனர்.
ஆனால், தற்போது மிக குறைந்த வாக்காளர்களைக் கொண்ட சமுதாயத்தைச் சேர்ந்த முன்னாள் அரசு கொறடா ஆர்.மனோகரன் போட்டியிட பல வழிகளில் காய் நகர்த்துகிறார். இது அ.தி.மு.க.வில் உள்ள முத்தரையர் மத்தியில் மிகப்பெரிய அதிர்வலைகளையும், அதிர்ச்சிகளையும் ஏற்படுத்தியிருக்கிறது. அ.தி.மு.க.வில் முன்னாள் அமைச்சர்கள் மு.பரஞ்ஜோதி, எஸ்.வளர்மதி, கே.கே.பாலசுப்பிரமணியன் உள்ளிட்டவர்கள் பிரபலமான முத்தரையர் முகங்களாக உள்ளனர்.