மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி, தனது வருமானம் குறைந்ததால் அமைச்சர் பதவியில் இருந்து விலகி மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். திருச்சூர் எம்.பி.யான அவர், தன்னை விட சதானந்தன் மாஸ்டர் தகுதியானவர் என்றும் கூறியுள்ளார்.
மத்திய இணையமைச்சராகப் பதவி வகிக்கும் பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி, தனக்கு அமைச்சர் பதவி வேண்டாம் என்றும், வருமானம் வெகுவாகக் குறைந்துவிட்டதால், மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்தி அதிகம் சம்பாதிக்கவே விரும்புவதாகவும் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
திருச்சூர் நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று, பெட்ரோலியத் துறை இணையமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கும் சுரேஷ் கோபி, இன்று (அக்டோபர் 12) கண்ணூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் அமைச்சர் பதவி குறித்த தனது மனநிலையைத் தெளிவாகப் பேசினார்.
23
எனக்கு வருமானம் குறைந்துவிட்டது!
“தேர்தலுக்கு முந்தைய நாள் வரைக்கும், ஒரு அமைச்சராக வேண்டாம் என்றுதான் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது நான் சொல்லி வந்தேன். எனது ஆசை, சினிமாவில் தொடர்ந்து நடிப்பதுதான். எனக்கு இப்போது வருமானம் வெகுவாகக் குறைந்துவிட்டது. ஆகவே, நிறைய சம்பாதிக்க வேண்டும். அந்த வருமானத்தில் குறைந்தபட்சம் சிலருக்காவது உதவ வேண்டும் என்று நினைக்கிறேன்.
இந்தக் கட்சியில் (பா.ஜ.க.) உள்ள இளைய உறுப்பினர்களுள் நானும் ஒருவன் தான். நான் 2016 அக்டோபரில் தான் இக்கட்சியில் உறுப்பினராகச் சேர்ந்தேன். அதன்பின், கேரளத்திலிருந்து முதல்முறையாக மக்களால் எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இக்கட்சியைச் சேர்ந்த முதல் ஆள் நான்தான். அதற்காகவே கட்சி என்னை அமைச்சராக்கியுள்ளது.
33
சதானந்தன் என்னைவிடத் தகுதியானவர்
உண்மையில், என்னைவிட இந்த அமைச்சர் பதவிக்கு, கேரள பா.ஜ.க-விலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகியுள்ள சதானந்தன் மாஸ்டர் பொருத்தமானவர்,” என்று சுரேஷ் கோபி வெளிப்படையாகத் தெரிவித்தார்.
மத்திய அமைச்சராகப் பொறுப்பு வகிக்கும் ஒரு நடிகர், தனது வருமானம் குறித்து வெளிப்படையாகப் பேசி, அமைச்சர் பதவியில் இருந்து விலக விரும்புவதாகக் கூறியிருப்பது கேரள அரசியலிலும், திரையுலகிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.