ராமநாதபுரம் அருகே குண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் 2 பேர் படுகொலை… பழிக்கு பழி வாங்கிய இளைஞர்கள்…

By Selvanayagam PFirst Published Oct 16, 2018, 8:02 PM IST
Highlights

ராமநாதபுரத்தை அடுத்த வாலாந்தரை கிராமத்தைச் சேர்ந்த கார்த்தி மற்றும் விக்னேஷ்வரன் என்ற இரு இளைஞர்களை 10 பேர்  கொண்ட கும்பல் ஒன்று பழிக்கு பழி வாங்கும் விதமாக வெடி குண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொடூரமாக கொலை செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரை கிராமத்தைச்  சேர்ந்தவர் சுப்ரமணியன். இவர் தனது பேத்திக்கு கடந்த மே மாதம் 20 ஆம் தேதி காதணி விழா நடத்தியுள்ளார். அப்போது முன்விரோதம் காரணமாக அதே ஊரைச் சேர்ந்த கார்த்தி என்பவர் உட்பட 20 மேற்பட்ட கும்பல் ஒன்று விழா  நடந்த இடத்திற்கு வந்து, சுப்ரமணியன் மற்றும் சூரப்புலி ஆகிய இருவரையும் கண்டம் துண்டமாக வெட்டி வீழ்த்திவிட்டு அங்கிருந்த தப்பியோடினர்.

இதையடுத்து கார்த்தி உட்பட 20 பேரும் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் கடந்த வாரம் கார்த்தி உள்ளிட்ட அனவரும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் நயினார் கோவில் போலீஸ் நிலையத்தில் நாள்தோறும் கையெழுத்து போட்டு வந்தனர்.

இந்நிலையில் இன்று மாலை கார்த்தி மற்றும் விக்னேஷ் ஆகிய இருவரும் காவல் நிலையத்தில் கையெழுத்துபோட்டுவிட்டு வீடு திருப்பிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களை சுற்றி வளைத்த கும்பல் ஒன்று, அவர்கள் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்தினர்.

இதில் அவர்கள் இருவரும் படுகாயமடைந்து நிலைகுலைந்து போயிருந்த நிலையில், அந்த கும்பல் அவர்களை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பியோடினர்.

இதையடுத்து அந்த கும்பலைச் சேர்ந்த 5 பேர் நயினார்கோவில் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். இந்த ரெட்டைக் கொலை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

click me!