சிபிஎஸ்இ தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டுமா? விடைத்தாளை இப்படி எழுதுங்க! சூப்பர் டிப்ஸ்.

Published : Feb 12, 2026, 08:51 AM IST
CBSE

சுருக்கம்

CBSE சிபிஎஸ்இ பொதுத்தேர்வில் நேரத்தை நிர்வகிப்பது மற்றும் விடைத்தாளை அழகாக சமர்ப்பிப்பது எப்படி? முழுமையான வழிகாட்டுதல் இங்கே.விடைத்தாளை இப்படி எழுதுங்க! சூப்பர் டிப்ஸ்.

சிபிஎஸ்இ (CBSE) பொதுத்தேர்வுகள் நெருங்கிவிட்டாலே மாணவர்களுக்கு ஒரு வித பதற்றம் தொற்றிக்கொள்ளும். வருடம் முழுவதும் படித்தது ஒரு பக்கம் இருந்தாலும், அந்த மூன்று மணி நேரத்தில் நாம் எப்படிச் செயல்படுகிறோம் என்பதில்தான் வெற்றியே அடங்கியிருக்கிறது. "நன்றாகப் படித்தும் மார்க் குறைந்துவிட்டது" என்று வருத்தப்படாமல் இருக்க, விடைத்தாளில் (Answer Sheet) நாம் கையாள வேண்டிய சில ஸ்மார்ட் உத்திகளை இங்கே காண்போம்.

அந்த 15 நிமிடங்களை வீணாக்காதீர்கள்

தேர்வு தொடங்குவதற்கு முன் வினாத்தாளைப் (Question Paper) படிப்பதற்கென்று 15 நிமிடங்கள் வழங்கப்படும். இதுதான் உங்கள் வெற்றியின் முதல் படி. இந்த நேரத்தில் எந்தெந்த கேள்விகளுக்குத் தெளிவாக விடை தெரியும், எதை முதலில் எழுதலாம் என்று திட்டமிடுங்கள். கடினமான கேள்விகளைக் கண்டு பயப்படாமல், தெரிந்த கேள்விகளைத் டிக் செய்து வைத்துக்கொண்டு மனதளவில் தயாராகுங்கள்.

தெரிந்ததை முதலில் எழுதுங்கள்

எப்போதும் உங்களுக்கு மிக நன்றாக விடை தெரிந்த கேள்விகளை முதலில் எழுதத் தொடங்குங்கள். முதல் சில பக்கங்களில் அடித்தல் திருத்தல் இல்லாமல், அழகான கையெழுத்தில் சரியான விடைகள் இருந்தால், திருத்துபவருக்கு உங்கள் மீது ஒரு நல்ல அபிப்பிராயம் (Good Impression) ஏற்படும். இது அடுத்தடுத்த விடைகளை அவர்கள் அணுகும் விதத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

பத்தி பத்தியாக வேண்டாம், பாயிண்ட்ஸ் முக்கியம்

நீண்ட பத்திகளாக (Paragraphs) எழுதுவதைத் தவிர்த்து, விடைகளை 'புல்லட் பாயிண்ட்ஸ்' (Bullet Points) போட்டு எழுதுவது சிறந்தது. இது திருத்துபவருக்குப் படிப்பதற்கு எளிதாக இருக்கும். முக்கிய வார்த்தைகளை (Keywords) பென்சிலால் அடிக்கோடிட்டுக் காட்டுங்கள். வரைபடங்கள் (Diagrams) தேவைப்படும் இடங்களில் பென்சிலால் தெளிவாக வரைந்து பாகங்களைக் குறிக்க மறக்காதீர்கள்.

நேர மேலாண்மை என்னும் மந்திரம்

பல மாணவர்கள் செய்யும் தவறு, ஒரு கேள்விக்கு அதிக நேரம் செலவிட்டுவிட்டு, கடைசி நேரத்தில் அவசர அவசரமாக மற்ற கேள்விகளை எழுதுவதுதான். ஒவ்வொரு பிரிவிற்கும் (Section) எவ்வளவு நேரம் ஒதுக்க வேண்டும் என்று முன்கூட்டியே திட்டமிடுங்கள். ஒரு கேள்விக்கு விடை தெரியவில்லை என்றால், அதிலேயே நேரத்தை வீணடிக்காமல் இடம்பித்துவிட்டு அடுத்த கேள்விக்குச் செல்லுங்கள்.

கடைசி 10 நிமிடங்கள்

தேர்வு முடிவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பே எழுதுவதை முடித்துவிடுங்கள். மீதமுள்ள நேரத்தில் விடைத்தாளைத் திரும்பப் பார்ப்பது (Revision) மிக அவசியம். வரிசை எண் (Question Number) சரியாகப் போட்டுள்ளீர்களா, அனைத்துக் கேள்விகளுக்கும் விடை அளித்துள்ளீர்களா என்று சரிபாருங்கள். இந்தச் சிறிய சரிபார்ப்பு பல மதிப்பெண்களைக் காப்பாற்றிக் கொடுக்கும். தன்னம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்ளுங்கள், வெற்றி நிச்சயம்!

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Govt Scheme: அரசு தரும் ரூ.4,000 உதவித்தொகை... முதலில் இந்த சான்றிதழை வாங்குங்கள்!
Microgreens Training: மைக்ரோ கிரீன்ஸ் மூலம் மாதம் ரூ.50 ஆயிரம் சம்பாதிக்கலாம் ஈசியா.! பயிற்சி எங்க நடக்குது தெரியுமா?