மீன் உற்பத்தியை பெருமளவில் அதிகரிக்க என்னவெல்லாம் செய்யலாம்? 

First Published Mar 20, 2018, 1:36 PM IST
Highlights
What can be done to maximize fish production?


தற்போது உலகளவில் மீன் உற்பத்தி ஏறத்தாழ 142 மில்லியன் மெட்ரிக் டன்கள் என்ற அளவில் உள்ளது. உலக மொத்த மீன் உற்பத்தியில் ஏறத்தாழ 68 விழுக்காடு அளவு மீன்பிடிப்பு மூலமாகவும், 32 விழுக்காடு அளவு மீன் வளர்ப்பு மூலமாகவும் பெறப்படுகிறது. மீன் பிடிப்பு மூலமாக பெறும் மீன் உற்பத்தி பெரும்பாலும் கடல்களிலிருந்தே பெறப்படுகிறது. 

கடந்த பல ஆண்டுகளாகவே நாம் கடல்களிலிருந்து பெறும் மீன் உற்பத்தி குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்காமல் ஒரே அளவிலேயே உள்ளது. எனவே இந்த சூழ்நிலையில் பெருகிவரும் மக்கள் தொகையின் தேவையை பூர்த்தி செய்வதற்கு மீன் வளர்ப்பு மட்டுமே ஒரு சாத்தியமான வழிமுறையாக உள்ளது. 

எனவே இன்று சர்வதேச அளவில் மீன்வளர்ப்பு வேகமாக வளரும் ஒரு தொழிலாக விளங்குகிறது. மீன் வளர்ப்பினை பொறுத்தமட்டில் சீனா உலக அரங்கில் முதல் நிலையையும் இந்தியா இரண்டாம் நிலையையும் வகிக்கின்றன. 

பெரும்பான்மையான பகுதிகளில் மித வெப்பநிலை நிலவுகின்ற நமது நாட்டில் மீன் வளர்ப்புத் தொழில் மிகப் பெரிய அளவில் வளருவதற்கு நிறைய வாய்ப்புக்கள் உள்ளன.

மீன் வளர்ப்பினை நன்னீர், உவர்நீர் மற்றும் கடல்நீர் ஆகிய மூன்று வகை நீர்களிலும் மேற்கொள்ளலாம். நமது நாட்டில் உவர்நீர் மற்றும் கடல்நீர் வளங்களைப் பயன்படுத்தி இறால்கள் பெருமளவில் வளர்க்கப்படுகின்றன. 

இறால் தவிர நண்டுகள், இங்கி இறால்கள், சில வகை உவர் மற்றும் கடல்நீர் மீன் இனங்கள், சிலவகை கடற்பாசிகள், நுண்பாசிகள் மற்றும் மிதவை உயிருணவு இனங்களை வளர்க்கும் வாய்ப்புகளும் தற்போது பெருகி வருகின்றன.

நமது நாட்டில் ஏறத்தாழ 29,000 கி.மீ நீளத்திற்கு ஆறுகளும், 3.15 மில்லியன் எக்டர் பரப்பளவு நீர்த்தேக்கங்களும், 0.2 மில்லியன் எக்டர் பரப்பளவு வெள்ளை நீர் தேங்கும் சமவளப்பகுதிகளும், நன்னீர் மீன் வளர்ப்பினை மேற்கொள்வதற்கேற்ற பொது வளங்களாகக் கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் தற்போது இத்தகைய பொதுநீர் வளங்களின் உற்பத்தித் திறன் மிகக்குறைவாகவே உள்ளது. 

எனவே இத்தகைய வளங்களில் மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பங்களை உரிய முறையில் பயன்படுத்துவதன் மூலம் இவற்றின் உற்பத்தித்திறனை அதிகரிப்பதோடு மொத்த மீன் உற்பத்தியையும் பெருமளவில் அதிகரிக்கலாம்.

click me!