நீங்களே தரமான நெல் நாற்றுக்களை உற்பத்தி செய்து பிசான நெல் சாகுபடி செய்யலாம்…

First Published Mar 27, 2017, 12:51 PM IST
Highlights
Picana quality paddy rice seedlings can be produced


நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெறுவதற்கு தரமான நாற்றுகளை உற்பத்தி செய்வதும், அதனை நடவு செய்வதும் மிகவும் முக்கியம்.

ரகங்கள்:

பிசான பருவத்துக்கு ஏற்ற குறுகிய கால 110 முதல் 115 நாள்கள் வயதுடைய அம்பை - 16, ஆடுதுறை - 36, ஆடுதுறை - 45 ரகங்களையும், மத்திய கால 120 - 125 நாள்கள் வயதுடைய ஆடுதுறை - 39 ரகங்களைத் தேர்வு உபயோகப்படுத்த வேண்டும்.

விதை நேர்த்தி:

விதை மூலம் பரவும் இலைப் புள்ளிநோய், குலைநோய், தூர் அழுகல் நோய்களைக் கட்டுப்படுத்த ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனாஸ் அல்லது கார்பண்டாசிம் 2 கிராம் கலந்து விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.

மேலும், வளிமண்டலத்திலுள்ள தழைச்சத்தை மண்ணில் நிலைப்படுத்தும் அசோஸ்பைரில்லம் 2 பொட்டலம் மற்றும் பயிரின் வேர் வளர்ச்சிக்கு தேவையான மணிச்சத்தை பயிருக்குக் கரைத்து கொடுக்கவல்ல பாஸ்போபாக்டீரியா 2 பொட்டலம் உயிர் உரங்கள் ஒரு ஏக்கருக்குத் தேவையான 20கிலோ விதையுடன் கலந்து நிழலில் உலர்த்தி பின்னர் விதைக்க வேண்டும்.

உயிர் உரங்கள் விதையுடன் ஒட்டும் பொருட்டு ஆறிய வடிகஞ்சியை பயன்படுத்த வேண்டும்.

நாற்றங்கால் தேர்வு:

ஒரு ஏக்கருக்கு நடவு செய்வதற்கு 8 சென்ட் நாற்றங்கால் போதுமானது. திருந்திய நெல் சாகுபடியில் நடவுசெய்ய ஏக்கருக்கு 1 சென்ட் மேட்டுபாத்தி பாய் நாற்றங்கால் போதுமானது.

உர நிர்வாகம்:

8 சென்ட் நாற்றங்காலுக்கு 1000 கிலோ நன்கு மக்கிய தொழு உரம் இட்டு நாற்றங்கால் தயார் செய்ய வேண்டும். கடைசி உழவுக்குமுன் 8 சென்ட் நாற்றங்காலுக்கு 40 கிலோ டி.ஏ.பி. இட வேண்டும்.

களிமண் பாங்கான நிலங்களில் நாற்றுகளை பிடுங்குவதற்கு 10 நாள்களுக்குமுன்னர் ஒரு சென்ட் டுக்கு 4 கிலோ ஜிப்சம் இட வேண்டும். ஜிப்சம் இடுவதால் நாற்றுக்களின் வேர்களை அறுபடாமல் எளிதில் எடுத்துவிடலாம்.

களை நிர்வாகம்:

நாற்றங்காலில் வரும் களைகளைக் கட்டுப்படுத்த விதைத்த 3 நாள்களுக்குப் பின்னர், 20 சென்ட் நாற்றங்காலுக்கு பூட்டாகுளோர் 80 கிராம் மருந்தை 2 கிலோ மணலுடன் கலந்து சீராகத் தூவ வேண்டும்.

பூச்சி நோய் நிர்வாகம்:

நாற்றங்காலில் வரும் இலைப்பேன்களைக் கட்டுப்படுத்த இமிடாகுளோர்பிரிட் மருந்தை 1 லிட்டர் தண்ணீருக்கு 0.5 மிலி கலந்து தெளிக்கலாம்.

பூஞ்சான் நோய்களைக் கட்டுப்படுத்த காபென்டாசிம் மருந்தை 1 லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் என்ற அளவில் கலந்து தெளிக்கலாம்.

இந்த முறைகளைப் பின்பற்றி வளர்ந்த நாற்றுகளை 20 - 22 நாள்களில் பறித்து நடவு செய்ய வேண்டும்.

திருந்திய நெல் சாகுபடி முறையில் 14 - 15 நாள்கள் வயதுடைய நாற்றுகளை, குத்துக்கு 1 - 2 நாற்றுகளை 25 செ.மீ.க்கு 25 செ.மீ. என்ற இடைவெளியில் நடவுசெய்தால், தரமான, வாழிப்பான நாற்றுகளைப் பெற்று அதிக மகசூல் அடையலாம்.

click me!