Asianet News TamilAsianet News Tamil

மாலத்தீவைத் தொடர்ந்து வங்கதேசத்திலும் இந்திய பொருட்கள் நிராகரிப்பா?

மாலத்தீவில் இந்தியாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி இருக்கும் நிலையில் வங்கதேசமும் இந்த லிஸ்டில் சேர்ந்து கொண்டுள்ளது. 

After Maldives India Out campaign in Bangladesh
Author
First Published Feb 13, 2024, 2:38 PM IST

மாலத்தீவுக்கும் இந்தியாவுக்கும் தூதரக ரீதியாக சிக்கல்கள் இருந்து வருகின்றன. இதற்குக் காரணம் மாலத்தீவின் விஷயங்களில் சீனா மூக்கை நுழைப்பதுதான். கடந்தாண்டு மாலத்தீவின் புதிய அதிபராக முகம்மது மொய்சு பதவியேற்றுக் கொண்டார். இவர் சீனாவின் ஆதரவாளராக தன்னை வெளிப்படையாக காட்டிக் கொண்டார். இது இந்தியாவுக்கு பல்வேறு வகைகளில் நெருக்கடியைக் கொடுத்தது. மாலத்தீவில் இந்தியா பல்வேறு கட்டமைப்புகளில் ஈடுபட்டு வருகிறது. இந்திய ராணுவத்தினர் மாலத்தீவில் முகாமிட்டுள்ளனர். இவர்களும் விரைவில் திரும்பப் பெறப்பட உள்ளனர். இவர்களுக்கு பதிலாக ராணுவம் சாராத இந்தியர்கள் மாலத்தீவில் பணியில் அமர்த்தப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

இந்தியாவுக்கு மிக அருகில் இருக்கும் குட்டித் தீவான மாலத்தீவு பொருளாதார ரீதியிலும் முக்கியமானதாக அமைந்துள்ளது. கப்பல் போக்குவரத்துக்கு மாலத்தீவு வழியாகத் தான் இந்தியாவுக்கு வந்தாக வேண்டும். இந்த நிலையில்தான், அதிபராக பதவியேற்றுக் கொண்ட மாலத்தீவு அதிபர் முகம்மது மொய்சு முதல் பயணமாக பீஜிங் சென்றிருந்து அந்த நாட்டின் அதிபர் ஜி ஜின்பிங்கை சந்த்தித்து இருந்தார்.

இது அரசியல் ரீதியாக இந்தியாவுக்கு சமிஞ்ஞை கொடுப்பதாகவே இருந்தது. இந்தியாவிடம் இருந்து பிரிந்து சென்ற தீவுதான் மாலத்தீவு. இந்த தீவின் எதிர்க்கட்சிகள் இந்தியாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றன. ஆனால், ஆளும்கட்சி சீனாவின் பக்கம் சாய்ந்துள்ளது. ''இந்தியா அவுட்'' கோஷங்களும் எழுப்பப்பட்டன. இது கடந்த ஆட்சிகளிலும் நடந்தது.

இந்திய வம்சாவளியினருக்குப் பிரதமர் மோடி பாராட்டு!

இந்தியாவின் அரசியல் தலையீடு உள்ளதா?

தற்போது இந்தக் காற்று வங்கதேசம் பக்கம் நகர்ந்துள்ளது. வங்கதேசத்தின் அரசியலில் இந்தியா தலையிடுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு அந்த நாட்டில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.  ''இந்தியா அவுட்'' என்ற கோஷத்துடன், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்க வேண்டாம் என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த நாட்டின் எதிர்க்கட்சிகளின் ஆதரவில் இந்தப் போராட்டங்கள் நடப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா நான்காவது முறையாக சமீபத்திய தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளார். எதிர்க்கட்சிகள், குறிப்பாக வங்கதேச தேசியவாத கட்சி ஹசீனாவுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். ஆட்சிக்கு ஹசீனா வந்த பின்னர் நாட்டில் சர்வதிகாரம் தூக்கியுள்ளது என்ற குற்றச்சாட்டை வைத்து வருகின்றனர். 

ஹமாஸ் பிடியில் இருந்து 2 பணயக்கைதிகள் மீட்பு! வீடியோ வெளியிட்ட இஸ்ரேல் ராணுவம்!

இந்தியா வங்கதேசம் உறவு? 

வங்கதேசத்தின் ஜனநாயகம் குறித்து சர்வதேச பார்வையாளர்கள் கவலை எழுப்பியுள்ளனர். ஆனால், இந்த விஷயத்தில், இந்தியா அந்த நாட்டுடனான நெருங்கிய ராஜதந்திர உறவுகள் காரணமாக தலையிடுவதைத் தவிர்த்து வருகிறது. பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் கிளர்ச்சிகளை எதிர்த்துப் போராடுவதற்கான கூட்டு முயற்சிகளுக்கு மட்டுமே வங்கதேசத்துடனான உறவை இந்தியா மதிக்கிறது என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மற்றபடி அந்த நாட்டின் அரசியல் நிகழ்வுகளில் இந்தியா தலையிடுவதில்லை.

வங்கதேச எதிர்க்கட்சியான வங்கதேச தேசியவாத கட்சியின் செயல்பாடுகளை இந்தியா சந்தேக கண்ணோட்டத்துடன் பார்த்து வருகிறது. இந்தக் கட்சி இஸ்லாமிய குழுக்களுடன் கைகோர்த்து செயல்படுவதாக கருதுகிறது. மேலும், இந்தியாவின் வடகிழக்கு பிராந்தியத்தில் கிளர்ச்சி நடவடிக்கைகளுக்கு இந்தக் கட்சி ஆதரவு தெரிவிப்பதாகவும் இந்தியா சந்தேகிக்கிறது.

வங்கதேசத்தில் இந்தியாவுக்கு எதிரான உணர்வு எவ்வாறு இருக்கிறதோ அதேதான் மாலத்தீவிலும் எதிரொலித்துள்ளது. மாலத்தீவில் இந்தியாவுக்கு எதிராக, தனக்கு ஆதரவாக ஒரு கூட்டத்தை உருவாக்கினார் அதிபர் முகம்மது மொய்சு. அதேசமயம், இந்திய தயாரிப்பு பொருட்களை வங்கதேச மக்கள் நிராகரித்தனரா என்பது குறித்து அறிந்து கொள்ள இன்னும் கால அவகாசம் தேவைப்படுகிறது என்ற கருத்தும் எழுந்துள்ளது. இந்தியாவுக்கும், வங்கதேச அரசுக்கும் இடையே உறவில் விரிசல் ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்தில் அந்த நாட்டின் எதிர்க்கட்சி செயல்படுகிறது என்ற கருத்தும் எழுந்துள்ளது.

வங்கதேசம் பதில் என்ன?
சமீபத்தில் இந்தியா வந்திருந்த வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சர் ஹசன் மஹ்முத் கூறுகையில் இரண்டு நாடுகளின் உறவும் ரத்தத்தால் பிணைந்துள்ளது. இந்தியாவில் தேர்தல் நடக்கவிருக்கிறது. எதிர்காலத்தில் இந்தியாவுக்கு ஷேக் ஹசீனா கண்டிப்பாக வருவார். இந்தியா எங்களது நெருங்கிய அண்டை நாடு. இந்தியா எங்களது அண்டை நாடு மட்டுமல்ல, சுதந்திரப் போரில் மிக முக்கியப் பங்காற்றியது. இந்திய மக்களும் ராணுவமும் ரத்தம் சிந்தினார்கள். எங்கள் உறவு ரத்தத்தால் பிணைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து எனக்கு முதல் அழைப்பு வந்தது. அதனால்தான் எனது முதல் வெளிநாட்டுப் பயணத்திற்கு இந்தியாவைத் தேர்ந்தெடுத்தேன்.

நாங்கள் இரு சகோதர நாடுகளாக இருக்கிறோம். இரு நாடுகளுக்கும் இடையே சிறப்பான உறவுமுறை உள்ளது. வங்கதேச அமைச்சர் இந்தியாவுக்கு வந்தால் அல்லது இந்திய அமைச்சர் வங்கதேசத்திற்கு வந்தால் இது இருநாடுகளுக்கும் இடையே உறவுகளை வலுப்படுத்தும்'' என்று தெரிவித்து இருந்தார்.

பட்ஜெட்டில் நிதி:
இந்தியாவுக்கும், மாலத்தீவுக்கும் இடையே உறவில் விரிசல் ஏற்பட்டு இருந்தாலும், 2024-25 பட்ஜெட்டில் ரூ. 170 கோடி குறைக்கப்பட்டு ரூ. 600 கோடியாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து இருந்தார். இதுவே, கடந்த 2023-24ஆம் ஆண்டு பட்ஜெட்டில் முதலில் ரூ. 400 கோடியாக நிதி ஒதுக்கப்பட்டு, பின்னர் ரூ. 770 கோடியாக உயர்த்தப்பட்டு இருந்தது. ஆனால், இதில் இருந்து நடப்பாண்டில் ரூ. 170 கோடி குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios