Asianet News TamilAsianet News Tamil

Romeo : "ஓட்டுக்கு காசு குடுத்தா வாங்கிக்கோங்க".. ஆனா.. "ரோமியோ" பிரஸ் மீட்டில் ஓப்பனாக பேசிய விஜய் ஆண்டனி!

Vijay Antony Speech : அரசியல் கட்சியினர் ஓட்டுக்கு பணம் தருவதை, வறுமை சூழ்நிலை கருதி வாங்கி கொள்ளலாம் என்று ஒரு செய்தியாளர் சந்திப்பில் பேசியுள்ளார் நடிகர் விஜய் ஆண்டனி.

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில், விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி மற்றும் மிருணாளினி ரவி நடித்துள்ள படம் தான் ‘ரோமியோ’. வரும் ஏப்ரல் 11ம் தேதி ரிலீசாக உள்ள இப்படம் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு கோவையில் நடைபெற்றது. இதில் "ரோமியோ" படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி மற்றும் நாயகி மிருணாளினி ரவி ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினர்.

அப்போது பேசிய விஜய் ஆண்டனி, குடும்பத்துடன் பார்க்கும் வகையில் இந்த படத்தை உருவாக்கி உள்ளதாக குறிப்பிட்ட அவர், குறிப்பாக மனைவிகள் பார்க்க வேண்டிய படம் இது  என தெரிவித்தார். ஒவ்வொரு கணவனும் மனைவியை இந்த படத்திற்கு அழைத்து வர வேண்டும் என்றார் அவர். ரோமியோ திரைப்படம் காதல் குறித்து விளக்குவதாகவும், திருமணத்திற்குப் பிறகு கணவன் - மனைவி இடையே காதல் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து கூறுவதாகவும் அவர் தெரிவித்தார்.

படத்தின் நாயகி முதலிரவு காட்சியில் மதி அருந்துவது போன்று வெளியிட்ட போஸ்டர் குறித்த கேள்விக்கு பதில் அளித்த விஜய் ஆண்டனி, படத்தில் சிறிய காட்சியாக அதை வெளிப்படுத்தி உள்ளதாகவும், இதில் கலாச்சார சீரழிவு போன்ற விஷயங்கள் புகுத்தபடவில்லை எனவும் தெரிவித்தார். பெண்கள் என்றுமே ஆண்களுக்கு மேலானவர்கள் என குறிப்பட்ட அவர், ஆண்கள் நிறைய இடங்களில் தோல்வி அடையும் போது அவர்களை தேற்றுவது ஒரு தாய், மனைவி போன்றவர்களே என்றார். 

சூட்டிங்கின் போது ஏற்பட்ட விபத்திற்கு பிறகு மனதளவில் இன்னும் நம்பிக்கையுடன் இருப்பதாக தெரிவித்தார். நல்ல படங்களுக்கு எப்போதும் வரவேற்பு இருப்பதாகவும், அண்மையில் வெளியான சில படங்கள் இதற்கு எடுத்துகாட்டாக இருப்பதாக அவர் கூறினார். நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள அரசியல் கட்சிக்கு தங்களின் ஆதரவு குறித்த நிலைபாடு குறித்த அவர் பேசுகையில் தாம் அனைத்து கட்சிகளுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார்.

தற்போது அரசியல் கட்சியினர் ஓட்டுக்கு பணம் வழங்குவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், ஓட்டுக்கு பணம் வழங்குவது, பெறுவது தவறாக இருந்தாலும், வறுமை, சூழ்நிலை கருதி ஓட்டுக்கு வழங்கப்படும் பணத்தை வாங்கி கொள்ளலாம், அது உங்கள் பணம் தான் என்று கூறிய கூறினார். ஆனால் பணம் பெற்றதால் அந்த கட்சிக்குதான் ஓட்டு போடுவேன் என்று இல்லாமல், நல்லவர்களுக்கு வாக்களிக்கலாம் என தெரிவித்தார்.

Video Top Stories