நோய் பரவும் வண்ணம் சுற்றுப்புறத்தை அசுத்தமாக வைத்திருந்தவர்களுக்கு ரூ.1 இலட்சத்து 60 ஆயிரம் அபராதம்…
சிவகங்கை
சிவகங்கையில் டெங்கு கொசு ஒழிப்பு தடுப்புப் பணிக்காக நடத்திய ஆய்வில் சுற்றுப்புறத்தை நோய் பரவும் வண்ணம் அசுத்தமாக வைத்திருந்தவர்களுக்கு ரூ.1 இலட்சத்து 60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பகுதியில் நகராட்சிகளின் கூடுதல் நிர்வாக இயக்குநர் செபாஸ்டின் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வில் பலமுறை சொல்லியும் வீட்டைச் சுத்தம் செய்யாமல் அசுத்தமாகவும் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் இருந்த வீடுகளுக்கு ரூ.10000 அபராதம் விதித்தார்.
மேலும், மோட்டார் பழுது பார்க்கும் நிறுவனத்தில் அளவுக்கு அதிகமான கொசுக்கள் இருந்தது கண்டறியப்பட்டதால் அந்நிறுவனத்திற்கு ரூ.1 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
ஒரு உணவகத்தில் குடிநீர் சுத்தமில்லாமல், நோய் ஏற்படும் வண்ணம் இருந்ததால் ரூ.50000 அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த ஆய்வின்போது நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி, நகராட்சிகளின் மண்டல செயற்பொறியாளர் சச்சிதானந்தம், தேவகோட்டை நகராட்சி பொறியாளர் ஜெயபால், சுகாதார ஆய்வாளர் மணிகண்டன், குடிநீர்ப்பணி மேற்பார்வையாளர் மணி உள்பட நகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.