ரயில்களில் கோச்சுகளின் எண்ணிக்கை அதிகப்படுத்த வேண்டும்! வலுக்கிறது கோரிக்கை! காரணம் இதுதான்!
தமிழக அரசு பேருந்து கட்டண உயர்வால், பொதுமக்கள் ரயில் நிலையங்களை நோக்கி திரும்பி உள்ளனர். இதனால், ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில் பயணிகள் வசதிகள் மேம்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் பேருந்து கட்டணம் 2 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. பேருந்து கட்டண உயர்வுக்கு எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், பேருந்து கட்டண உயர்வை வாபஸ் பெறக்கோரி போராட்டம் நடத்தப்போவதாகவும் திமுக உள்ளிட்ட கட்சிகள் அறிவித்துள்ளன.
பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து பொதுமக்கள் பல இடங்களில் சாலை மறியல் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், மாணவ-மாணவிகளும் பேருந்து கட்டண உயர்வுக்கு எதிரான போராட்டத்தில் குதித்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை அன்று பேருந்துகளின் கட்டண உயர்வு அமலுக்கு வந்த நிலையில் 20 ஆம் தேதி மட்டும் ரூ.8 கோடி கூடுதலாக வசூலாகி உள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகின்றனனர்.
தமிழகத்தில் பேருந்து கட்ணம் பலமடங்கு உயர்த்தப்பட்டு வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனால், ரயில்களில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. ரிசர்வ் பெட்டிகளிலும் காத்திருப்போரின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
சென்னை கடற்கரை - தாம்பரம், சென்னை கடற்கரை - சூலூர், சென்னை கடற்கரை - அரக்கோணம் ரயில் வழித் தடங்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. அதேபோல நீண்ட தூர ரயில்களிலும் வழக்கத்துக்கு அதிகமாக பயணிகள் பயணித்து வருகின்றனர். எனவே கூடுதல் பெட்டிகளை இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில் பயணிகள் வசதிகள் மேம்பாட்டு வாரிய உறுப்பினர் ஆசிர்வாதம் ஆச்சாரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆசிர்வாதம் ஆச்சாரி கூறுகையில், பேருந்து கட்டண உயர்வுக்குப் பிறகு, பொதுமக்கள் ரயில் வண்டிகளை நோக்கி தங்களின் கவனத்தை திருப்பியுள்ளனர். இதன் காரணமாக அனைத்து ரயில்களிலும், கூடுதலாக புக்கிங் செய்யப்பட்டு வருகிறது. எனவே, ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைக்க சர்வே எடுக்குமாறு ரயில்வே அதிகாரிகளைப் பணித்துள்ளதாக கூறினார். மேலும் பேசிய அவர், பேருந்து கட்டண உயர்வால்
ஏற்பட்டுள்ள இந்த இக்கட்டான சூழலில், தமிழக மக்களின் துயர் துடைக்க மோடி அரசு எந்த நேரமும் தயாராக உள்ளதாகவும், ஆசிர்வாதம் ஆச்சாரி கூறினார்.