ஆரணியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் – வணிகர்களுக்கு கெடு வைத்த கோட்டாட்சியர்…
திருவண்ணாமலை
ஆரணியில் உள்ள ஆக்கிரமிப்புகளை வரும் நவம்பர் 4-ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்று வணிகர்களுக்கு கோட்டாட்சியர் கெடு வைத்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று வணிகர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு கோட்டாட்சியர் கிருபானந்தம் தலைமைத் தாங்கினார். வட்டாட்சியர் சுப்பிரமணி, ஆணையாளர் செளந்தர்ராஜன், ஆரணி காவல் துணைக் கண்காணிப்பாளர் ஜெரினாபேகம், காவல் ஆய்வாளர் சாலமன்ராஜா, உதவி ஆய்வாளர் ஜமீஸ்பாபு ஆகியோரும் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில், “ஆரணி நகரத்தில் ஆக்கிரமிப்பு செய்துள்ள வணிகர்கள் அனைவரும் வரும் நவம்பர் 4-ஆம் தேதிக்குள் தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள வேண்டும்.
இல்லையென்றால் நவம்பர் 5-ஆம் தேதி நகராட்சி, நெடுஞ்சாலைத் துறை சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்” என்று கோட்டாட்சியர் கிருபானந்தம் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் வணிகர்கள் சங்க நிர்வாகிகள் சர்மா, குருநாராயணன், எஸ்.டி.செல்வம் மற்றும் வணிகர்கள் பலர் பங்கேற்றனர்.