நில வேம்பு கசாயம் குறித்து தவறான தகவல் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை !! அமைச்சர் விஜய பாஸ்கர் எச்சரிக்கை !!!
நிலவேம்பு குடிநீர் ரத்தத்தில் உள்ள ரத்த தட்டணுக்களை அதிகரிக்கும் என்றும், டெங்கு காய்ச்சலுக்கு இது சரியான மருந்து என்றும் தெரிவித்த அமைச்சர் விஜய பாஸ்கர், நில வேம்பு குடிநீர் குறித்து தவறான தகவல் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
தமிழ்நாடு முழுவதும் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. ஒவ்வொரு நாளும் 10 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். டெங்குவை கட்டுப்படுத்த தமிழக அரசின் சுகாதாரத்துறை மூலம் கடுமையான நடவடிக்கை எடுத்தாலும், காய்ச்சல் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
டெங்கு காய்ச்சலை குணமாக்க இன்னும் திட்டவட்டமான ஒரு மருந்தை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், சித்த மருத்துவர்கள், நிலவேம்பு குடிநீரை குடித்தால் டெங்கு காய்ச்சல் குணமாகிவிடும், என்று உறுதியாக நம்புகிறார்கள்.
இதை தமிழக அரசும் ஏற்றுக்கொண்டு, இப்போது அனைத்து மருத்துவமனைகளிலும் நிலவேம்பு குடிநீர் வழங்கி வருகிறார்கள். அரசு மட்டுமல்லாமல், அனைத்து அரசியல் கட்சிகளும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் நிலவேம்பு குடிநீர் வழங்கிக்கொண்டு இருக்கிறார்கள்.
அதே நேரத்தில் டெங்கு காய்ச்சல் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு அனுப்பு வைத்த குழு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று ஆய்வு செய்தனர்.
இதைத் தொடர்ந்து இந்த குழுவின் தலைவரான அஷ்தோஷ் பிஸ்வாஸ், நிலவேம்பு குடிநீரை குடிக்கச்சொல்லி இந்த மருத்துவக்குழு பரிந்துரை செய்யாது. ஏனெனில், இது குணமாகும் என்று அறிவியல் ரீதியாக எந்த ஆய்வுகளும் இதுவரையில் தெரிவிக்கவில்லைஎன்று ஒரு அதிர்ச்சிகரமான ஒரு தகவலை தெரிவித்தார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர், நிலவேம்புக் குடிநீர் குறித்து தவறான தகவல்களைப் பரப்புவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
நிலவேம்பு நீர் ரத்த தட்டணுக்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் என்று ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால் மலட்டுத் தன்மை ஏற்படாது. எனவே நிலவேம்புஅ குடிநீர் குறித்து தவறான தகவல்களைப் பரப்பக் கூடாது என தெரிவித்தார்.