மணல் கடத்தலைத் தடுக்க முடியுமா? முடியாதா? – ஆட்சியரகத்தை முற்றுகையிட்ட மக்கள்…
திருவள்ளூர்
மணல் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு திருவள்ளூர் மக்கள் போராட்டம் நடத்தினர்.
திருவள்ளூரை அடுத்த அரண்வாயல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான அரண்வாயல்குப்பம், முருகஞ்சேரி போன்ற பகுதிகளைச் சேர்ந்த திரளான மக்கள் திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இவர்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞர் அணி நிர்வாகி பாலசுப்பிரமணியன் தலைமைத் தாங்கினார்.
அவர்கள் அனைவரும் “நாங்கள் அரண்வாயல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிரந்தரமாக வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் உள்ள கூவம் ஆற்றில் நாள்தோறும் இரவு நேரங்களில் மாட்டு வண்டிகள், டிராக்டர்கள் என முப்பதுக்கும் மேற்பட்ட வாகனங்களில் மணல் கடத்தல் நடந்து வருகிறது.
அதனைத் தொடர்ந்து மணல் கடத்தல் நடந்து வருவதால் ஆற்றில் ஆங்காங்கே பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது.
மேலும், எங்களுக்கு நிலத்தடி நீர் பாதிப்பு ஏற்படும் அபாயமும், விவசாயம் செய்ய முடியாத நிலையும் உள்ளது.
இதுகுறித்து நாங்கள் பலமுறை அதிகாரிகளிடம் புகார் மனு அளித்தும் இது நாள்வரை அவர்கள் எந்த ஓரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, அரண்வாயல் கூவம் ஆற்றில் மணல் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று அவர்கள் தெரிவித்தனர்.
பின்னர், அவர்கள் இது தொடர்பான புகார் மனுவை ஆட்சியர் சுந்தரவல்லியிடம் கொடுத்தனர். அந்த மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.