காரில் கடத்திவரப்பட்ட 500 கிலோ ரேசன் அரிசி சிக்கியது; பறக்கும்படை அதிகாரிகள் அதிரடி…
கன்னியாகுமரி
கன்னியாகுமரியில் காரில் கடத்திவரப்பட்ட 500 கிலோ ரேசன் அரிசியை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கடத்தலில் ஈடுபட்ட கார் ஓட்டுநர் அதிகாரிகளை பார்த்ததும் தப்பியோடிவிட்டார்.
கன்னியாகுமரி மாவட்ட பறக்கும்படை தனி வட்டாட்சியர் ராஜசேகர், துணை வட்டாட்சியர் சந்திரசேகர், வருவாய் ஆய்வாளர் இராதாகிருஷ்ணன், ஊழியர் ஜாண்பிரைட் ஆகியோர் திருவட்டாறு, ஆற்றூர் பகுதியில் உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, கல்லுப்பாலம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை நடத்தினர்.
சோதனைக்கு கார் நிறுத்தப்படுவதை பார்த்த கார் ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார். பின்னர், காரை சோதனையிட்டபோது, அதில் 500 கிலோ ரேசன் அரிசி பதுக்கி வைக்கபட்டு இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
பின்னர், அந்த 500 கிலோ ரேசன் அரிசியை பறிமுதல் செய்து காப்புக்காடு நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கியில் ஒப்படைத்தனர்.