Asianet News TamilAsianet News Tamil

கடல் கடந்து மலர்ந்த காதல்..! சீன பெண்ணை கரம்பிடித்த சேலம் மருத்துவர்..!


சீன பெண்ணை காதலித்து சேலம் மருத்துவர் ஒருவர் திருமணம் செய்துள்ளார்.

salem doctor married china lady
Author
Tamil Nadu, First Published Nov 5, 2019, 4:20 PM IST

காதலுக்கு ஜாதி,மத பேதம் கிடையாது என்பார்கள். காதலுக்கு கண் இல்லை என்று கூறுவார்கள். அதே போல் தான் காதலுக்கு இன,மொழி,தேச பேதங்களும் கிடையாது. அதை மெய்ப்பிக்கும் வகையில் பல்வேறு காதல் திருமணங்கள் சாட்சியாக திகழ்கின்றன. தற்போது அதே போன்று மீண்டும் ஒரு திருமணம் அரங்கேறியுள்ளது.

சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டி அருகே இருக்கும் மணக்காடு பகுதியைச் சேர்ந்தவர் பரசுராமன். இவரது மகன் அருண்பிரசாத். இவர் ஆஸ்திரேலியா நாட்டில் இருக்கும் ஒரு அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். வேறொரு இடத்தில் பகுதி நேரமாகவும் அருண்பிரசாத் வேலைபார்த்து வந்துள்ளார். அப்போது அவருக்கும் கிரிஸ்டல் ஜியாங் என்கிற சீன பெண்ணிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கிரிஸ்டல் ஜியாங், தனியார் நிறுவனத்தில் மனித வளமேம்பாட்டு அதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார்.

salem doctor married china lady

இருவரும் நண்பர்களாக பழக, நாளடைவில் கிரிஸ்டல் ஜியாங் மீது காதல் வயப்பட்டிருக்கிறார் அருண் பிரசாத். முதலில் காதலிக்க மறுத்த கிரிஸ்டல் ஜியாங் பின்னர் காதலை ஏற்றுக்கொண்டுள்ளார். 5 வருடங்களுக்கு மேலாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்தநிலையில் திருமணம் செய்து கொள்வது என்று முடிவெடுத்தனர். அதற்காக இருவீட்டிலும் சம்மதம் பெற்றனர். சேலத்தில் வைத்து திருமணம் நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டது. இதற்காக கிரிஸ்டல் ஜியாங், தனது பெற்றோருடன் இந்தியா வந்தார்.

salem doctor married china lady

இதையடுத்து திருமண ஏற்பாடுகள் கோலாகலமாக நடந்து வந்தது. குறித்தபடி திருமணம் நேற்று நடந்தது. கிறிஸ்தவ முறைப்படி நேற்று காலை சேலம் ஜான்சன் பேட்டையில் இருக்கும் புனித அந்தோணியார் கோவிலில் திருமணம் நடந்தது. இதில் இருவீட்டாரின் உறவினர்கள், நண்பர்கள் என பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். வரும் 10 ம் தேதி ஆஸ்திரேலியா செல்லும் புதுமண தம்பதியர், ஏப்ரல் அல்லது மே மாதத்தில் அங்கு திருமண வரவேற்பு நடத்த இருப்பதாக கூறியுள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios