சுர்ஜித் மரணம்... இதுவே கடைசியாக இருக்கட்டும் - டிடிவி தினகரன்... சுர்ஜித் மரணம் வருத்தமளிக்கிறது - ஹெச். ராஜா... நெஞ்சம் பதறுகிறது - ரவிக்குமார் எம்.பி.
ஆழ்துளைக் கிணறோ, பாதாள சாக்கடையோ - சிக்கிக்கொண்டோரைக் காப்பாற்றுவதற்கான கருவிகள் இல்லாதது தொழில்நுட்பம் சார்ந்த பிரச்சனையல்ல; மனித உயிர்களை இந்த நாடு எவ்வளவு மலிவாகக் கருதுகிறது என்பதன் அடையாளம்.
குழந்தை சுர்ஜித் மரணத்துக்கு அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன், பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா இரங்கல் தெரிவித்துள்ளனர்.
குழந்தை சுர்ஜித் 82 உயிர்ப் போராட்டத்துக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டான். சுர்ஜித்தின் மரணம் தமிழகத்தையே சோகத்தில் தள்ளியுள்ளது. சுர்ஜித்தின் மரணத்தை அடுத்து தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “எப்படியாவது நலமுடன் வந்துவிடுவான் என்று அனைவரும் எதிர்பார்த்த குழந்தை சுஜித் சடலமாக மீட்டெடுக்கப்பட்டது மனதை உலுக்குகிறது. குழந்தையை இழந்திருக்கும் பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூற வார்த்தைகளால் முடியாது. ஆழ்துளை குழிகளில் நிகழும் உயிரிழப்பில் இதுவே கடைசியாக இருக்கட்டும். தன் உயிரைக் கொடுத்து சுஜித் கற்றுத் தந்திருக்கிற பாடத்தை அனைத்துத் தரப்பினரும் இனியாவது கடைபிடிக்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.
பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “சிறுவன் சுஜித்தை காப்பாற்ற அரசு தீவிர முயற்சி மேற்கொண்டும் காப்பாற்ற இயலாதது வருத்தமளிக்கிறது. சுஜித்தின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் எம்.பி.யும் விசிக பொதுச்செயலாளருமான ரவிக்குமார் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “நெஞ்சு பதறுகிறது. இந்தக் குழந்தை எவ்வளவு துன்பத்தை அனுபவித்துவிட்டது. எனது அஞ்சலி! ஆழ்துளைக் கிணறோ, பாதாள சாக்கடையோ - சிக்கிக்கொண்டோரைக் காப்பாற்றுவதற்கான கருவிகள் இல்லாதது தொழில்நுட்பம் சார்ந்த பிரச்சனையல்ல; மனித உயிர்களை இந்த நாடு எவ்வளவு மலிவாகக் கருதுகிறது என்பதன் அடையாளம்” என தெரிவித்துள்ளார்.