எப்போ தனிக்கட்சி தொடங்குவேன் ? நடிகர் ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு !!
கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதியன்று அரசியலில் குதிக்கப் போவதாகவும் தனிக்கட்சி தொடங்கப் போவதாகவும் அறிவித்த நடிகர் ரஜினிகாந்த், தற்போது வரை தொடங்கவில்லை. இந்நிலையில் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனிக்கட்சி தொடங்கப் போவதாக ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.
சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட செயலாளர்கள் மத்தியில் நாடாளுமன்ற தேர்தல் நிலைப்பாடு குறித்த கருத்துகளை கேட்டறிந்தார்.
தொடர்ந்து பேசிய ரஜினிகாந்த் , நாடாளுமன்ற தேர்தல் நமது இலக்கு அல்ல. 2017-ல் அரசியல் அறிவிப்பை வெளியிடும் போதே சட்டமன்ற தேர்தல் தான் நமது இலக்கு என்பதை தெளிவாக கூறியிருந்தேன்.
நமது இயக்கம் வித்தியாசமானது. நிர்வாகிகள் யாரும் பணம், பதவியை எதிர்பார்த்து இருக்கக்கூடாது. அப்படி எதிர்பார்ப்பவர்கள் யாராவது இருந்தால், அவர்கள் இப்போதே இங்கிருந்து வெளியேறி விடலாம் என தெரிவித்தார்..
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக- காங்கிரஸ் கட்சிக்கும் இடையே தான் போட்டி நிலவும். நாம் சட்டமன்ற தேர்தலை மட்டும் எதிர்கொள்வோம். அதில் நமது பலத்தை நிரூபிப்போம். அந்த நேரத்தில் நமக்கு சாதகமான அலை வீசும். மகான்கள் ஆசி, கடவுள் ஆசி, மக்களின் ஆசி நமக்கு இருக்கிறது என ரஜினி தெரிவித்தார்.
சட்டசபை தேர்தல் முன்கூட்டி வர வாய்ப்பு இல்லை. இப்போதைக்கு 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வந்தாலும் ஆளும் கட்சி அதற்கு தேவையானவற்றை எல்லாம் செய்து தேர்தலில் வெற்றி பெற்றுவிடும். தற்போது நமது இயக்கத்தில் 50 சதவீதம் பூத் கமிட்டி வேலை முடிந்து இருக்கிறது. இந்த நிலையில், தேர்தலை சந்தித்து எதிரணிக்கு வெற்றியை உருவாக்கி கொடுத்துவிடக்கூடாது என கூறினார்.
.
சட்டமன்ற தேர்தல் 2021-ல் நடைபெற உள்ள நிலையில், 2020-ம் ஆண்டு ஆகஸ்டு அல்லது செப்டம்பர் மாதம் தனிக்கட்சி தொடங்குவோம். அப்போது கட்சியை தொடங்கினாலும் தேர்தலை சந்திப்பதற்கு போதுமான கால அவகாசம் உள்ளது. ஒருவேளை அரசியல் சூழ்நிலை காரணமாக முன்கூட்டியே கட்சியை தொடங்க வேண்டியது ஏற்பட்டால் அதற்கும் தயாராகுவோம் என அதிரடியாக தெரிவித்தார்.