சும்மா ததும்பி நிற்கும் கபினி அணை….. இப்போவோ, அப்பவோன்ணு நிறைய காத்திருக்கு… இன்னைக்கு 3000 அடி திறந்தாச்சு… இனி திறந்துவிட்டுதான் ஆகணும்…
கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணையின் கொள்ளளவு 84 அடி. தற்போது நீரின் அளவு 83 அடியாக உள்ளது. தொடர்ந்து காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் நீர்வரத்து அதிகமாகியுள்ளது. வேறு வழியில்லாமல் கர்நாடக அரசு தற்போது காவிரியில் விநாடிக்கு 3000 கனஅடி நீர் திறந்துவிட்டுள்ளது. தொடர்ந்து இது அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காவிரி நதிநீர் பங்கீடு குறித்து உச்சநீதிமன்ற தீர்ப்பை கர்நாடக அரசு அவமதித்து வருகிறது. இது தொடர்பான இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசும் நீண்ட போராட்டத்துக்கப் பின் காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்துள்ளது. இதன் உறுப்பினர்களின் பெயர் பட்டியலை தமிழக, கேரள மற்றும் புதுச்சேரி அரசுகள் மத்திய அரசிடம் வழங்கிவிட்ட நிலையில் கர்நாடக அரசு அரசு அதை அனுப்பாமல் அடம் பிடித்து வருகிறது.
காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்ததில் கர்நாடக மாநிலத்துக்கு பாதகமான சில அம்சங்கள் இருப்பதாகவும், அவை சரி செய்யப்பட்ட பின் உறுப்பினர்களின் பட்டியலை அனுப்புவோம் என்றும் குமாரசாமி முரண்டு பிடித்து வருகிறார்.
ஆனால் இயற்கை தமிழகத்துக்கு சாதகமாகத்தான் இருக்கிறது. கடந்த வாரம் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் கபினி மற்றும் கேஆர்எஸ் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயரத் தொடங்கியது.
இதையடுத்து கபினி அணையிலிருந்து 35000 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டது.இந்த நீர் மேட்டூர் அணை வந்து சேர்ந்தது. தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. ஆனால் கர்நாடகாவில் மழை திடீரென நின்றுவிட்டதால் கபினி அணைக்கு வரும் நீரின் அளவும் குறைந்தது, இதையடுத்து அங்கிருந்து திறந்துவிடப்படும் தண்ணிரின் அளவு 500 அடியாக குறைக்கப்பட்டது.
இந்நிலையில் தென் மேற்குப் பருவமழை கர்நாடகாவில் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இதனால் கபினிக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்துள்ளது. கபினி அணையின் முழுக் கொள்ளளவு 84 அடி. நீர்மட்டம் தற்போது 83 அடியாக உள்ளது. இதையடுத்து 3000 கனஅடி நீர் திறக்கபட்டுள்ளது. கபினி அணைக்கு வரும் நீர் தொடர்ந்து அதிகரித்து வருவதால் இனி கூடுதல் தண்ணீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.