இரட்டை இலை கிடைத்தாலும் ஒரு பிரயோசனமும் இல்லை: பொன்.ராதாகிருஷ்ணன் பளீச்!
இரட்டை இலைச் சின்னத்துக்காக தேர்தல் ஆணையத்தில் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றார்கள், எடப்பாடி மற்றும் தினகரன் தரப்பினர். ஆனால், எந்த அணிக்கு இரட்டை இலைச் சின்னம் கிடைத்தாலும், யாருக்கும் எந்த உபயோகமும் இருக்காது என்று கூறியுள்ளார் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்.
மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், கும்பகோணத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் அமைச்சர்கள் ஒவ்வொரு விதமாகப் பேசிக் கொண்டிருப்பது குறித்து கேள்வி எழுப்பப் பட்டது. மேலும், தமிழக அரசியல் சூழல் குறித்தும் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார் பொன்.ராதாகிருஷ்ணன். அப்போது, “அமைச்சர்கள் தங்கள் பிரச்னைகளை ஒதுக்கிவிட்டு மக்கள் பிரச்னைகளை தீர்ப்பதற்கு முன்வர வேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு கொலை, கொள்ளை அதிகரித்துள்ளது. இரட்டை இலைச் சின்னத்துக்காக தேர்தல் ஆணையத்தில் இரு அணியினரும் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால், எந்த அணிக்கு இரட்டை இலைச் சின்னம் கிடைத்தாலும், யாருக்கும் எந்த உபயோகமும் இருக்காது” என்று கூறினார்.
முன்னதாக, அதிமுக அணிகளுக்கு இடையே பிளவு ஏற்பட்ட போது, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நேரத்தில், அதிமுக.,வின் அதிகாரப்பூர்வ சின்னமாக இருந்த இரட்டை இலைச் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது.