ஐஎன்எக்ஸ் வழக்கில் சிதம்பரத்துக்கு மீண்டும் திஹார்: வீட்டுச்சாப்பாடு, மேற்கத்திய கழிப்பறை,தனிச்சிறை வழங்க நீதிமன்றம் உத்தரவு
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேட்டில் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கப்பிரிவினரால் கைது செய்யப்பட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்துக்கு நவம்பர் 13-ம் தேதிவரை நீதிமன்றக் காவல் விதித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேட்டில் சிபிஐ வழக்கில் கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி கைது செய்யப்பட்ட சிதம்பரத்துக்கு, உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி இருந்தது.
ஆனால், ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேட்டில் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் நடந்த வழக்கில் சிதம்பரத்தை அமலாக்கப்பிரிவு கடந்த 16-ம் தேதி கைது செய்தது. அவரை 30ம் தேதிவரை விசாரிக்க அமாலக்கப்பிரிவுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி இருந்தது.
இந்நிலையில், சிதம்பரத்துக்கான விசாரணைக் காலம் இன்று முடிந்ததையடுத்து, அவரை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் குஹெர் முன் ஆஜர்படுத்தினார்கள். சிதம்பரம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், அமலாக்கப்பிரிவு தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகினார்கள்.
அமலாக்கப்பிரிவு வழக்கறிஞர் துஷார் மேத்தா அமலாக்கப்பிரிவு கூடுதலாக ஒருநாள் காவலில் வைத்து சிதம்பரத்தை விசாரிக்கவேண்டியது இருக்கிறது எனக் கோரிக்கை விடுத்தார்.இதற்குச் சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல் எதிர்ப்புத் தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி குஹெர் சிறிதுநேரம் தீர்ப்பை ஒத்திவைத்தார். அதன்பின் அவர் பிறப்பித்த உத்தரவில், " சிதம்பரத்துக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் அதாவது நவம்பர் 13-ம் தேதிவரை காவல் விதிக்கப்படுகிறது. சிதம்பரத்தின் உடல்நிலையைக் கருதி திஹார்சிறை அதிகாரிகள் அவருக்கு மருந்துகள், மேற்கத்தியக் கழிவறை, தனிச்சிறை, பாதுகாவலர்கள் ஆகியவற்றை வழங்கவும், வீட்டிலிருந்து சமைக்கப்பட்ட உணவை வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்