Parenting Tips : லீவு விட்டாச்சு! இனியாவது குழந்தைகளை வெளியில் விளையாட விடுங்க..
இன்றைய வேகமான மற்றும் டிஜிட்டல் காலங்களில் குழந்தைகள் தங்கள் பெரும்பாலான நேரத்தை வீட்டிற்குள் செலவிடுகிறார்கள். இதனால் அவர்கள் இயற்கையின் தொடர்பை இழக்கிறார்கள்.
இன்றைய காலத்தில், நவீன விஞ்ஞானம் தரும் சலுகைகள் குழந்தைகளை இயற்கையோடு இணைந்திருக்காமல் தூரப்படுத்துகிறது என்பதில் தவறில்லை. காரணம் இன்று பெரும்பாலான குழந்தைகளின் கைகளில் மொபைல், டேப் போன்றவை இருக்கிறது. இதனால் அவர்கள் வெளியே விளையாடச் செல்வது அரிதாகிவிட்டது. அதுமட்டுமின்றி, அவர்களை சுற்றியிருப்பதெல்லாம் கான்கிரீட் காடு என்பதால், செல்ல நினைத்தாலும் விளையாடுவதற்கு ஏற்ற இடம் கூட இல்லை. இருப்பினும், குழந்தைகளின் உடல், உணர்ச்சி மற்றும் மன வளர்ச்சிக்கு இயற்கையோடு விளையாடுவது தான் மிகவும் அவசியம்.
வெளியில் விளையாடுவது குறைந்து வருகிறது:
காலங்கள் செல்ல குழந்தைகள் வெளியில் விளையாடுவது குறைந்து வருகிறது. இதற்கு பல காரணங்கள் உள்ளன. உதாரணமாக, வீடியோ கேம்கள், சமூக வலைதளங்கள் என அவர்களிடம் இருக்கும் எண்ணற்ற ஆப்ஷன்கள், அவர்களை வெளியில் செல்ல விடாமல் தடுக்கிறது.
மற்றொரு காரணம், இன்று பெரும்பாலான வீடுகளில் பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்வதால், குழந்தைகளின் பாதுகாப்பு கருதி, குழந்தைகள் வீட்டுக்குள்ளேயே இருப்பது தான் நல்லது என்று முடிவு எடுத்துள்ளனர். இன்னொரு காரணம், குழந்தைகள் வெளியில் விளையாடுவதற்கு ஏற்ற இடங்கள் வீட்டிற்கு அருகிலேயே இல்லை என்பதுதான்.
குழந்தைகள் வெளியில் விளையாடாததால் ஏற்படும் விளைவுகள்:
குழந்தைகள் வெளியில் விளையாடாததால் அவர்கள் தங்கள் குழந்தை பருவத்தில் உடல் பருமன், மன அழுத்தம் போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகிறார்கள். அது மட்டுமின்றி, வெளியில் விளையாடுவதை அனுபவிக்காத குழந்தைகள், இயற்கை மட்டுமே அளிக்கும் அத்தியாவசிய கற்றல் அனுபவங்களை இழக்கிறார்கள்.
இதையும் படிங்க: Parenting Tips : சிறு குழந்தைகள் ஏன் அடிக்கடி வாயில் விரல்களை வைக்கிறார்கள் தெரியுமா..?
குழந்தைகள் வெளியில் விளையாடுவதால் கிடைக்கும் நன்மைகள்:
- குழந்தைகளின் வளர்ச்சிக்கு உடற்பயிற்சி இன்றியமையாதது மற்றும் இந்த பயிற்சி வெளிப்புற விளையாட்டு மூலம் தான் அடைய முடியும். இது அவர்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பல நன்மைகளையும் வழங்குகிறது. இது உணர்ச்சி மற்றும் அறிவாற்றல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மட்டுமின்றி, கற்பனை, படைப்பாற்றல் மற்றும் சமூக திறன்களையும் மேம்படுத்துகிறது.
- குழந்தைகள் வெளியில் விளையாடினால், சிக்கலைத் தீர்ப்பது மற்றும் ஆய்வு செய்வது ஆகியவற்றை ஊக்குவிக்கிறது. இவை அனைத்தும் அவர்களின் தன்னம்பிக்கையை வளர்ப்பதற்கான அத்தியாவசிய திறன்கள் ஆகும்.
- அதுமட்டுமின்றி, குழந்தைகள் வெளியில் விளையாடினால், சூரிய ஒளியின் வெளிப்பாடு உடலுக்கு வைட்டமின் டி உற்பத்தி செய்ய போதுமான வாய்ப்பை வழங்குகிறது. இதனால் குழந்தைகளின் எலும்புகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது.
- சொல்ல போனால், குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு அவசியம் என்பதால், வெளியில் விளையாடுவதை பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும்.
இதையும் படிங்க: Parenting Tips : கோடை வெயிலில் குழந்தைகளை பாதுகாக்க சூப்பரான டிப்ஸ் இதோ!!..!
ஆரோக்கியமான உணவும் அவசியம்:
குழந்தைகள் வெளியில் விளையாடுவது மட்டுமின்றி, சரிவிகித உணவும் இங்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இது அவர்களின் உடல் வளர்ச்சிக்கு மட்டுமின்றி அறிவாற்றல் வளர்ச்சி மற்றும் மன ஆரோக்கியத்திற்கும் முக்கியமானது. ஒரு ஆய்வின்படி, குழந்தைகளின் உணவு உயரம் மற்றும் அறிவாற்றல் ஆகியவற்றிற்கு இடையே நேரடி தொடர்பு உள்ளது. எனவே, குழந்தைகளின் உடல், உயரம் மற்றும் புத்திசாலித்தனத்தின் அளவை மேம்படுத்துவதற்கு போதுமான ஊட்டச்சத்து நிறைந்த உணவை சாப்பிடுவது தான் மிகச் சிறந்த வழியாகும்.
இயற்கையோடு இணைந்திருக்கவும்:
குழந்தைகளை இயற்கையோடு இணைவதற்கான வாய்ப்புகளை பெற்றோர்கள் தான் வழங்க வேண்டும். இது அவர்களின் பொறுப்பு என்று கூட சொல்லலாம். பெற்றோர்கள் அப்படி அவர்களை ஊக்குவிப்பதன் மூலம் குழந்தைகளுக்கு பல நன்மைகள் கிடைக்கும். இது அவர்களின் ஆரோக்கியமான, மகிழ்ச்சியான எதிர்காலத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. முக்கியமாக, வெளிப்புற விளையாட்டின் நன்மைகளுக்கு எல்லையே இல்லை என்றே சொல்லலாம். அதுபோல் இதன்மூலம் கிடைக்கும் நினைவுகள் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும். உங்கள் வீட்டைச் சுற்றி இதற்கு சாத்தியமில்லை என்றால், அவர்களை அடிக்கடி அருகிலுள்ள பூங்காவிற்கு அழைத்துச் செல்லுங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D