Asianet News TamilAsianet News Tamil

மோடியின் ஆட்சியில் ரயில் பயணம் தண்டனையாகி விட்டது: ராகுல் காந்தி சாடல்!

நரேந்திர மோடியின் ஆட்சியில் 'ரயில் பயணம்' தண்டனையாகி விட்டது என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்

In the rule of Narendra Modi travelling by train has become a punishment alleges rahul gandhi smp
Author
First Published Apr 21, 2024, 2:19 PM IST

ரயில்களில் பயணம் செய்வது மிகவும் வசதியானது மற்றும் பாதுகாப்பானது. டிக்கெட் செலவும் குறைவுதான். இதனால், தினமும் ரயில்களில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் உள்ளது. ஆனால், அண்மைக்காலமாகவே, ரயில்வே மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் அடுக்கப்படுகின்றன.

பொதுப்பெட்டியில் பயணிப்பதற்கான டிக்கெட்டுகளை வைத்துக் கொண்டு ஏராளமானோர் ஏ.சி. பெட்டிகளிலும், ஸ்லீப்பர் வகுப்புகளிலும் பயணிப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. இதனால், முன்பதிவு செய்பவர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். மேலும், இடவசதியின்றி ரயில் பெட்டிகளின் கழிவறைகளில் பயணிக்கும் அவலமும் அரங்கேறி வருகிறது. இதுதொடர்பான, புகைப்படங்கள், வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரயில்வேத்துறையை மேம்படுத்த முன்னெப்போதும் இல்லாத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக மத்திய அரசு கூறுகிறது. வந்தே பாரத் போன்ற புதிய ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டு அனைத்து ரயில்களையும் பிரதமர் மோடியே கொடியசைத்து துவக்கி வைத்து வருகிறார்.

இந்த பின்னணியில், ரயில்களில் நடக்கும் அவலம் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. பொதுப்பெட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்படுவதாலும், சாதாரண ரயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படாமல் இருப்பதாலும் இத்தகைய அவலங்கள் அரங்கேறுவதாக கூறுகிறார்கள்.

இந்த நிலையில், நரேந்திர மோடியின் ஆட்சியில் 'ரயில் பயணம்' தண்டனையாகி விட்டது என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக, ரயில் கழிவறையில் பொதுமக்கள் பயணம் செய்யும் வீடியோவை பகிர்ந்து ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

 

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “நரேந்திர மோடியின் ஆட்சியில் 'ரயில் பயணம்' தண்டனையாகிவிட்டது. 'சாமானியர்களின் ரயில்களில் இருந்து பொதுப் பெட்டிகளைக் குறைத்து 'எலைட் ரயில்களை' மட்டுமே ஊக்குவிக்கும் மோடி அரசால் அனைத்து வகைப் பயணிகளும் துன்புறுத்தப்படுகிறார்கள். உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகளைப் பெற்ற பிறகும் மக்கள் தங்கள் இருக்கைகளில் வசதியாக உட்கார முடியாது; சாமானியர்கள் தரையிலும், கழிப்பறைகளிலும் பதுங்கியிருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். மோடி அரசு, அதன் கொள்கைகள் மூலம், ரயில்வேயை பலவீனப்படுத்தி, அதை 'திறமையற்றது' என்று நிரூபிக்க விரும்புகிறது, இதனால் அதை தனது நண்பர்களுக்கு விற்க ஒரு சாக்கு கிடைக்கும். சாமானியர்களின் பயணத்தை காப்பாற்ற வேண்டுமானால், ரயில்வேயை சீரழிப்பதில் மும்முரமாக இருக்கும் மோடி அரசை அகற்ற வேண்டும்.” என பதிவிட்டுள்ளார்.

மாலத்தீவு நாடாளுமன்ற தேர்தல்: பொதுமக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு!

Follow Us:
Download App:
  • android
  • ios