ரூபாய் நோட்டு தடை, ஜி.எஸ்.டி. வரியால் திருமண சீசனும் பாதிக்கும்.... ஆய்வில் அதிர்ச்சித் தகவல்....
பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு கொண்டு வந்த ரூபாய் நோட்டு தடை, ஜி.எஸ்.டி. வரி ஆகியவற்றால் நவம்பர் மாதத்தில் இருந்து தொடங்க இருக்கும் திருமண சீசனும் 15 சதவீதம் வரை பாதிக்கும் என்று இந்திய தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பான “அசோசெம்” தெரிவித்துள்ளது.
திருமண மண்படம், திறந்தவெளி மண்டபம் முன்பதிவு, கேட்டரிங் சேவை, புகைப்படம், வீடியோ எடுத்தல், திருமணச் சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு சேவைகளும் கடுமையான பாதிப்பை எதிர் கொள்ளும் எனத் தெரிவித்துள்ளது.
நவம்பர் மாதம் தொடங்கு திருமண சீசன் பிப்ரவரி மாதம் வரை நீடிக்கும். இந்த திருமண சீசனில் தங்க நகைகள், பட்டுச்சேலைகள் எடுத்தல், அலங்காரம்செய்தல், அழகு நிலையத்துக்கு செலவிடுதல், புகைப்படம், வீடியோவுக்காக செலவிடுதல், ஓட்டல், திருமண மண்டபம் முன்பதிவு, கேட்டரிங் உள்ளிட்ட பலவற்றுக்காக மணமகன், மணமகள் வீட்டார் செலவிடுவார்கள்.
ஆனால், மத்திய அரசு கொண்டு வந்த சரக்கு மற்றும் சேவை வரி, மற்றும் ரூபாய் நோட்டு தடை ஆகியவற்றால், திருமணத்துக்காக செலவிடுவதில் இந்த ஆண்டு மக்கள் தாராளம் காட்டமாட்டார்கள், சிக்கனமாகவே செலவிடுவார்கள் என அசோசெம் தெரிவித்துள்ளது.
ஜி.எஸ்.டி. வரி நடைமுறைக்கு வந்ததில் இருந்து புத்தாடைகள் எடுத்தல், திருமண மண்டபம் , கேட்டரிங் சேவை ஆகியவற்றுக்கு வரி கடுமையாக விதிக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய 18 சதவீதம் முதல் 28 சதவீதம் வரை வரி விதிக்கப்பட்டுள்ளதால், மக்கள் செலவு செய்வதை குறைத்துக்கொள்ளலாம்.
ஜி.எஸ்.டி. வரி நடைமுறைக்கு முன்பு இந்த விஷயங்களில் மக்கள் அதிகமாக செலவிடுவதில் நாட்டம் காட்டினார்கள். ஏனென்றால், முறையான ரசீது இல்லாமல் அனைத்தும் கிடைத்ததால், அதன் விலையும் குறைவான இருந்தது. ஆனால், தற்போது வரி செலுத்த வேண்டி இருப்பதால், வரிக்காக தனியாக பணம் ஒதுக்க வேண்டி இருக்கிறது. இதனால், செலவு தொகை தங்கள் பட்ஜெட்டைக் காட்டிலும் அதிகரிக்கும் என்பதால், நடுத்தர குடும்பத்தினர் செலவைக் குறைக்க நேரலாம்.
மேலும், ரூ.500க்கு மேல் உள்ள செருப்புகளுக்கு 18 சதவீதம் வரி, தங்கம், வைர நகைகளுக்கு 3 சதவீதம் வரி, நட்சத்திர ஓட்டல்களில் திருமண வரவேற்பு வைத்தால், 28சதவீதம் வரி, கேட்டரிங், மண்டபம் முன்பதிவு, திருமண திறந்தவெளி அரங்கு ஆகியவற்றுக்கு 18சதவீதம் வரி ஆகியவற்றால் வழக்கமாக திருமணத்துக்கு ஒதுக்கும் செலவைக்காட்டிலும் கூடுதலாக ஜி.எஸ்.டிக்காக தனியாக செலவு செய்ய வேண்டியது இருக்கிறது. ஆதலால், இந்த விஷயங்களில் செலவு செய்ய மக்கள் சிறிது தயக்கம் காட்டலாம்.
திருமண விஷேயங்களில் சமையல் பொருட்களை நடுத்தர மக்கள், ஏழைகள் மளிகை பொருட்களை, பணப்பற்றாக்குறையை காரணம் காட்டி சில நேரங்களில் கடனுக்காகவும, தவணையிலும் வாங்குவார்கள். ஆனால், ஜி.எஸ்.டி. வந்தபின் தவணையில் பில் போட வர்த்தகர்களால் இயலாது என்பதால், மளிகை பொருட்கள் விற்பனையிலும் தேக்கம் ஏற்படலாம்.
இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் தனது சொத்தில் ஐந்தில் ஒருபகுதியை திருமணச் செலவுக்காக செலவிடுவார்கள் என்பது ஆய்வில் கூறப்படுகிறது. ஆனால், ஜி.எஸ்.டி. மற்றும் ரூபாய் நோட்டுதடை உத்தரவின் தாக்கத்தால், தங்களின் திருமணச் செலவை மறுஆய்வுசெய்யும் கட்டத்துக்கும், செலவை குறைக்கும் நிலைக்கும் தள்ளப்படுவார்கள் என்று அசோசெம் தெரிவிக்கிறது.