Nayanthara : இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் நயன்தாரா அதை மறக்கவே இல்ல.. பிரபல நடிகை ஓபன் டாக்..
மாலா பார்வதி தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் நயன்தாராவின் ஆரம்ப கட்ட வாழ்க்கை குறித்து நடிகை பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
கேரளாவை பூர்வீகமாக கொண்ட நயன்தாரா ஐயா படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதை தொடர்ந்து தமிழில் அவருக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. இதனால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக மாறினார். மேலும் 20 ஆண்டுகளுக்கும் மேல் ஹீரோயினாக நடித்து வரும் நயன் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கப்படுகறார்..
எனினும் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் பல காதல் விவகாரங்களில் சிக்கி சர்ச்சைகளில் சிக்கினார் நயன். ஆனால் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் சர்ச்சைகள் விமர்சனங்களை கொண்டு தன்னை தானே செதுக்கி கொண்டு புதிய உச்சத்திற்கு சென்றுள்ளார்.
தென்னந்தியாவின் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாகவும், பணக்கார நடிகையாகவும் இருக்கிறார். இதனிடையே நானும் ரௌடி தான் படத்தில் நடித்த போது இயக்குனர் விக்னேஷ் சிவன் – நயன் இடையே காதல் மலர்ந்தது. இதை தொடர்ந்து கடந்த 2022-ம் ஆண்டு விக்னேஷ் சிவனை மணந்தார். இந்த தம்பதிக்கு உயிர், உலக் என்ற இரட்டை பிள்ளைகள் உள்ளனர்.
திருமணத்திற்கு பிறகும் நயன்தாரா தொடர்ந்து நடித்து வருகிறார். கடந்த ஆண்டு வெளியான ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டிலும் அறிமுகமானார் நயன். தமிழில் கடைசியாக அன்னப்பூரணி படத்தில் நடித்த அவர், தற்போது மண்ணாங்கட்டி படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நடிகையும், நயன்தாரா ஆரம்பத்தில் வேலை செய்த சேனலில் பணியாற்றியவருமான மாலா பார்வதி தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் நயன்தாராவின் ஆரம்ப கட்ட வாழ்க்கை குறித்து நடிகை பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அதில் பேசிய அவர் “ நான் சேனல் ஒன்றில் வேலை செய்த போது தான் முதன்முதலில் டயானா என்ற நயன்தாராவை பார்த்தேன். எனக்கு மேக்கப் போட்டுவிட பிடிக்கும் என்பதால், அந்த சேனலின் மேக்கப் ரூமுக்கு நான் தான் பொறுப்பு. அப்போது சமயம் என்ற நிகழ்ச்சிக்காக நான் டயானாவுக்கு மேக்கப் போட்டுவிட்டுக் கொண்டிருந்தேன்.
அப்போது அவரின் பெற்றோர் என்னிடம், எங்கள் மகளுக்கு 2 பட வாய்ப்புகள் வந்துள்ளது, எந்த படத்தில் நடிக்கலாம் என்று கேட்டனர். நான் சத்தியன் அந்திக்காடு இயக்கத்தில் கெரியரை தொடங்கினால் நன்றாக இருக்கும் என்று பரிந்துரை செய்தேன். அதன்படி சத்தியன் அந்திக்காடு இயக்கிய படத்தின் மூலம் தனது கெரியரை தொடங்கினார்.
பிறகு பல ஆண்டுகள் நான் டயானாவை பார்க்கவில்லை. கடைசியாக அன்னபூரணி பட ஷூட்டிங்ஸ்பாட்டில் தான் அவரை பார்த்தேன். அவர் தற்போது லேடி சூப்பர் ஸ்டாராக இருக்கிறார். அவருக்கு என்னை ஞாபகம் இருக்குமா என்று நினைத்தேன். ஆனால் என்னை பார்த்த உடன் என்னிடம் வந்து இயல்பாக பேசினார். இத்தனை ஆண்டுகள் என்னை நினைவு வைத்திருந்தது என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருந்தது. தான் ஒரு பெரிய நடிகை என்ற பந்தாவே அவரிடம் இல்லை.
நான் சைவம் மட்டுமே சாப்பிடுவேன் என்று தெரிந்து எனக்காக சாப்பாடு வரவழைத்து கொடுத்தார். சினிமா பின்னணி இல்லாமல் இந்தளவு சாதித்திருக்கும் நயன்தாராவை பார்க்கும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது” என்று தெரிவித்தார். மாலா பார்வதி மலையாளத்தில் பல சீரியல்கள், படங்களில் நடித்துள்ளார். தமிழில் இது என்ன மாயம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.