பரபரப்பை உண்டாக்கிய நகை திருட்டு சம்பவங்கள்..! வடமாநில கொள்ளையர்கள் அதிரடி கைது..!
கோவை அருகே பல்வேறு இடங்களில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்த வடமாநில இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவையில் இருக்கும் செட்டி வீதியை சேர்ந்தவர் முரளி. இவர் அங்கு இருக்கும் நகை பட்டறையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் வேலை பார்க்கும் நகை பட்டறையில் தினமும் செய்யும் நகைகளை பல்வேறு இடங்களுக்கு சென்று கொடுத்து வருவது வழக்கம். அதன்படி ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி கர்நாடக மாநிலத்திற்கு பட்டறையில் செய்யப்பட்ட நகைகளுடன் சென்றிருந்தார். அந்த நகைகளை கொடுத்து விட்டு மீதி இருந்த 44 லட்சம் மதிப்பிலான நகைகளுடன் பேருந்தில் பெங்களூருவில் இருந்து கோவை வந்தார்.
கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இறங்கும் போது அவரிடம் இருந்த நகையை காணாது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக உடனடியாக கோவை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரின் புகாரின் அடிப்படையில் தனிப்படை அமைக்கப்பட்டு காவலர்கள் தீவிர விசாரணையில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில் கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் சந்தேகப்படும்படி 2 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் இருவரும் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஷகில் அகமது (41), ரியா உசேன் (44) என்பதும் அவர்கள் ஆம்னி பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளிடம் இருந்து நகை மற்றும் பணத்தை திருடும் கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறைச்சாலையில் அடைத்தனர்.
இந்த வழக்கு குறித்து கூறிய காவல்துறையினர், நகை பட்டறை ஊழியரிடம் இருந்து திருடப்பட்ட நகைக்கும் கைதான வடமாநில கொள்ளையர்கள் இருவருக்கும் எந்தவித தொடர்புமில்லை என்றும் அவர்கள் மீது கோவை மாநகர பகுதியில் இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்றும் கூறினர். அவர்கள் இருவரும் நன்றாக உடை அணிந்து ஆம்னி பேருந்துகளில் போலி முகவரி கொடுத்து பயணம் செய்து வைத்திருக்கிறார்கள்.
இரவில் பயணிகள் தூங்கியதும் அங்கிருக்கும் சூட்கேஸ் பைகள் மற்றும் நகை பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பி இருக்கின்றனர். அவர்களிடம் சிறிய பூட்டுகளை உடைக்க பயன்படும் ஸ்க்ரூ ட்ரைவர் மற்றும் சில பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஒரு இடத்தில் திருடிவிட்டு தங்கள் சொந்த ஊருக்கு விமானத்தில் செல்லும் இவர்கள் அங்கு நகையை விற்பனை செய்து விட்டு மீண்டும் வேறொரு பகுதிக்கு செல்வார்கள். இவ்வாறு பல்வேறு இடங்களில் நகை பணத்தை கொள்ளையடித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து இருக்கின்றனர். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
முக்கிய கொள்ளைச் சம்பவங்களில் கைது செய்யப்பட்டிருக்கும் இருவருக்கும் தொடர்பிருக்கிறதா என்று கோவை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.