பாடலாசிரியர் மேத்தாவின் மனைவி காலமானார்!
கவிஞரும் பாடலாசிரியருமான முகமத் மேத்தாவின் மனைவி சையது ராபியா என்கிற மல்லிகா மேத்தா, இன்று அதிகாலை மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இவருக்கு வயது 62 .
அவரது உடல், சென்னை பெசண்ட் நகர் கலாக்ஷேத்திரா காலனி, ராஜராஜன் தெருவில் இருக்கும் மு.மேத்தாவின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. கவிஞர்களும், பாடலாசிரியர்களும், இலக்கியவாதிகளும் மல்லிகா மேத்தா உடலுக்கு தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அவரது உடல் நாளை கொட்டிவாக்கத்தில் உள்ள கபர்ஸ்தானில் அடக்கம் செய்யப்படுகிறது.
கவிஞர் மு மேத்தாவின் புகழ்பெற்ற கவிதைத் தொகுப்பான கண்ணீர் பூக்கள் வெளியானதில் மல்லிகா மேத்தாவின் பங்கும் உண்டு. அதை கவிஞர் மேத்தா இப்படிக் குறிப்பிட்டிருந்தார் ஒரு கவிதையில் ...
கண்ணகி கால் சிலம்பைக் கழற்றினாள்
மாணவர்கள் சிலப்பதிகாரம் படித்தார்கள்
என் மனைவி கைவளையல் கழற்றினாள்
நீங்கள் கண்ணீர் பூக்கள் படிக்கிறீர்கள்!
வாழ்க்கைத்துணைவியாக இருந்து வாழ்க்கையில் மட்டும் பங்கு எடுத்துக்கொள்ளாமல், கவிஞர் மேத்தாவின் கனவையும் நனவாக்கிய இவரை இழந்து வாடும் இவரது குடும்பத்துக்கு நம் ஆழ்ந்த அனுதாபங்கள்