45 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தயாரிக்கப்படும் ‘காசி யாத்திரை’...
சரியாக 45 ஆண்டுகளுக்கு முன்பு எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் வி.கே.ராமசாமி, சுருளிராஜன்,சோ.ராமசாமி,மனோரமா ஆகியோர் நடிப்பில் வெளிவந்து சக்கைப்போடு போட்ட ‘காசி யாத்திரை’ படம் மீண்டும் எடுக்கப்படவிருக்கிறது. முந்தைய படத்திற்கு திரைக்கதை எழுதிய வி.சி.குகநாதனே மீண்டும் திரைக்கதை எழுதுகிறார்.
சரியாக 45 ஆண்டுகளுக்கு முன்பு எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் வி.கே.ராமசாமி, சுருளிராஜன்,சோ.ராமசாமி,மனோரமா ஆகியோர் நடிப்பில் வெளிவந்து சக்கைப்போடு போட்ட ‘காசி யாத்திரை’ படம் மீண்டும் எடுக்கப்படவிருக்கிறது. முந்தைய படத்திற்கு திரைக்கதை எழுதிய வி.சி.குகநாதனே மீண்டும் திரைக்கதை எழுதுகிறார்.
சில ஆண்டுகளுக்கு முன்பாகவே இயக்குநர் இராம.நாராயணன், 'கண்ணா லட்டு தின்ன ஆசையா’ வெற்றிப் படத்தை அடுத்து இந்த ‘காசி யாத்திரை’ படத்தை ரீ மேக் செய்ய யோசித்திருந்தார். ஆனால் அதற்குள்ளாக அவர் காலமாகிவிட்டதால் அத்திட்டம் அப்போதைக்கு நிறுத்தப்பட்டிருந்தது.
ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விஜய் சேதுபதி உட்பட பல முன்னணி நடிகர்களின் படங்களின் வெளிநாட்டு உரிமையை வாங்கி விநியோகம் செய்த அனுபவம் கொண்ட மனோன்ஸ் சினி கம்பைன்ஸ் நிறுவனம் இப்போது இந்தப் படத்தை தயாரிக்க முன் வந்திருக்கிறது.இந்த ‘காசி யாத்திரை’ படத்தைத் தயாரிக்க அதன் தயாரிப்பாளரும், கதாசிரியருமான வி.சி.குகநாதனிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவரிடம் படத்தின் முழு ஸ்கிரிப்டையும் வாங்கி உள்ளது. இதில் நடிப்பதற்கு பிரபல நடிகர்கள் மற்றும் நடிகையரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.இயக்குநர் இராம.நாராயணனின் பல படங்களுக்கு வசனம் எழுதியவரும் 10 படங்களுக்கு மேல் இயக்கியவருமான புகழ்மணி இப்படத்தை இயக்கவிருக்கிறார். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தில் இயக்குநர் இராம.நாராயணனிடம் பணியாற்றிய தொழில் நுட்ப கலைஞர்கள் பலரும் இந்தப் படத்தில் பணிபுரிய உள்ளார்கள்.
இயக்குநர் வி.சி.குகநாதனிடம் இது குறித்து கேட்டபோது, “தமிழ் திரையுலகில் மீண்டும் கதாசிரியர்களின் காலம் துவங்குவது மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறது. என்னைப்போல் திரையுலகில் இன்னும் நிறைய கதாசிரியர்கள் இருக்கிறார்கள். அவர்களையும் திரையுலகம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் 6-ம் தேதி துவங்குகிறது. இடைவிடாமல் வளர்ந்து வரும் மே மாதம் திரைக்கு வரவுள்ளது…” என்று கூறினார்.