மெர்சல் படத்தை ஃப்ரீயா பாருங்கன்னு லிங்க் அனுப்புவாங்களாம்! இது நியாயமா சொல்லுங்க!
மெர்சல் திரைப்படம் தீபாவளி அன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியிலும், பொது மக்கள் மத்தியிலும் நல்ல விமர்சனங்களைப் பெற்று வந்தாலும். இந்தப் படத்திற்கு மேலும் மேலும் அடுக்கடுக்காக பல பிரச்சனைகள் வந்து கொண்டே தான் இருக்கின்றன..
தற்போது மெர்சலுக்கு மேலும் ஒரு புதுப்பிரச்சனை வந்துள்ளது. அது என்னவென்றால் இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு தலைவர் டாக்டர் ரவிசங்கர் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அதில், மருத்துவர்களுக்கு எதிராக மெர்சல் படத்தில் விஜய் பேசிய வசனத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம். இந்த பிரச்னையை நாங்கள் பத்திரிக்கை, கோர்ட் எனச் சென்று நிவாரணம் தேடப்போவதில்லை. அதற்கு பதிலாக இணையதள பக்கங்களில் மெர்சல் படத்துக்கான இணைப்பு முகவரியை வெளியிட உள்ளோம்.
இதனால் ரசிகர்கள் கட்டணம் இன்றி படத்தைப் பார்த்து விடுவதால் அவர்களுக்கு டிக்கெட் விற்பனை பாதிக்கும். இந்த தகவலை அனைத்து டாக்டர்களுக்கும் பரவச் செய்து அமைதிப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம் என தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தப் போராட்டத்தை, சம்பந்தப்பட்டவர்கள் நன்றாக உணரும்படி செய்ய நமது ஒற்றுமையைக் காட்டுவதோடு, கவுரவத்தையும் நிலைநிறுத்துவோம் என அதில் கூறப்பட்டுள்ளது.
இவர்கள் இப்படிச் செய்வதால் அது படக்குழுவினரை மட்டுமின்றி, விநியோகஸ்தர்களையும் பாதிக்கும் செயலாகத்தான் இருக்கும் என பலர் வலைத்தளத்தில் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர்.