செஸ் ஒலிம்பியாட்: நீச்சல் குளத்தில் தண்ணீரில் மிதந்தபடி செஸ் விளையாடி மாணவ, மாணவியர் அசத்தல்

By karthikeyan VFirst Published Jul 22, 2022, 8:15 PM IST
Highlights

செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் நடக்கவுள்ளதையொட்டி தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுவரும் நிலையில், காஞ்சிபுரம், திண்டுக்கல், நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் நீச்சல் குளத்தில் தண்ணீரில் மிதந்தபடி மாணவ மாணவியர்கள் செஸ் விளையாடி அசத்தினர்.
 

செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் முதல் முறையாக இந்தியாவில் நடக்கிறது. அதுவும் தமிழ்நாட்டில் மாமல்லபுரத்தில் நடப்பது தமிழ்நாட்டிற்கு சிறப்பு, பெருமை.

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் உலகம் முழுவதிலும் இருந்து 186  நாடுகளிலிருந்து 2500க்கும் அதிகமான வீரர்கள் கலந்துகொண்டு விளையாடுகின்றனர். 

செஸ் ஒலிம்பியாட் குறித்த விழிப்புணர்வு தமிழகம் முழுவதும் ஏற்படுத்தப்பட்டுவருகிறது. வரும் 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 10 வரை செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடக்கவுள்ள நிலையில், அதற்காக மாமல்லபுரத்தில் சர்வதேச தரத்திலான அரங்குகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

இதையும் படிங்க - வணக்கம்.. வெல்கம் டூ சென்னை..! செஸ் ஒலிம்பியாட் வரவேற்பு பாடல் வெளியீடு.. வீடியோ

இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியை உலகமே கண்டு வியக்குமளவிற்கு நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு மேற்கொண்டுவருகிறது. அதற்காக தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் செஸ் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுவருகிறது.

அந்தவகையில், காஞ்சிபுரம், திண்டுக்கல், நாகர்கோவில் ஆகிய இடங்களில் நீச்சல் குளத்தில் மிதந்தபடி நீச்சல் பயிற்சி பெறும் மாணவ, மாணவியர்கள் மற்றும் நீச்சல் வீரர்கள், வீராங்கனைகள் செஸ் விளையாடி அசத்தினர். வித்தியாசமான முறையில் எடுக்கப்பட்ட இந்த முன்னெடுப்பு அனைவரையும் கவர்ந்தது.

திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள நீச்சல் குளத்தில், நீச்சல் பயிற்சி பெறும் மாணவ, மாணவியர்கள்  16 குழுக்களாக பிரிந்து தண்ணீரில் மிதந்தபடி செஸ் விளையாடினர். தண்ணீரில் மிதக்கும்படியான செஸ் போர்டுகளை மிதக்கவிட்டு மாணவ மாணவியர் செஸ் விளையாடினர்.

இதையும் படிங்க - விராட் கோலியின் ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுக்கு இத்தனை கோடியா? அடேங்கப்பா.. பிசிசிஐ ஒப்பந்த ஊதியத்தை விட அதிகம்

அதேபோல காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கில் அமைந்துள்ள நீச்சல் குளத்திலும் நீச்சல் வீரர்கள், வீராங்கனைகள் செஸ் விளையாடி அசத்தினர். நாகர்கோவில் மற்றும் மற்ற சில மாவட்டங்களிலும் நீச்சல் குளத்தில் மாணவ, மாணவியர்கள் செஸ் விளையாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
 

click me!