குஜராத்தில் 40 ஆயிரம் பெண்கள் மாயம்.. மனித கடத்தல், விபச்சாரத்துக்கு தள்ளப்படும் கொடுமை - என்சிஆர்பி தகவல்

By Raghupati RFirst Published May 7, 2023, 7:29 PM IST
Highlights

குஜராத் மாநிலத்தில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் மாயமாகியுள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தில் ஐந்து ஆண்டுகளில் 40,000 க்கும் மேற்பட்ட பெண்கள் காணாமல் போயுள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) தெரிவித்துள்ளது. கடந்த 2016ல், 7105 பெண்கள் காணாமல் போயுள்ளனர். 2017ல் 7712, 2018ல் 9246, 2019ல் 9268, மற்றும் 2020ல் 8290 பெரும் காணாமல் போயுள்ளனர்.

என்சிஆர்பி தரவுகளில் (2022), குஜராத்தில் மட்டும் 41,621 பேர் காணாமல் போயுள்ளனர். முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், குஜராத் மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினருமான சுதிர் சின்ஹா இதுபற்றி கூறுகையில், காணாமல் போன வழக்கை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. வழக்குகள் கொலை வழக்குகளைப் போலவே தீவிரமானவை ஆகும்.

ஒரு குழந்தை காணாமல் போனால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்காக வருடக்கணக்கில் காத்திருக்கிறார்கள். போலீஸ் அமைப்பு இதுபோன்ற வழக்குகளை தள்ளுபடி செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளது'' என்றார்.  அகமதாபாத் மற்றும் வதோதராவில் 2019-20 ஒரு வருடத்தில் மட்டும் 4,722 பெண்கள் காணாமல் போயுள்ளனர்.

இவர்கள் எங்கு இருக்கிறார்கள்? எதற்காக கடத்தப்படுகிறார்கள்? வேலைக்காக புலம்பெயர்ந்து சென்றார்களா என்பது அம்மாநிலத்துக்கே தெரியவில்லை. இது ஏன் என்று முன்னாள் அதிகாரிகள் பலர் அதிர்ச்சிகர தகவல்களை தெரிவித்துள்ளனர். முன்னாள் கூடுதல் காவல்துறை இயக்குநர் (டிஜிபி) டாக்டர் ராஜன் பிரியதர்ஷி கூறுகையில், காணாமல் போன சிறுமிகள் மற்றும் பெண்களின் புகார்களில் பெரும்பாலானவை மனித கடத்தல் தொடர்பானவை ஆகும்.

இதையும் படிங்க..ரூ.20000க்கு குறைவான சிறந்த டாப்-5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் பட்டியல் இதோ

நான் கெடா மாவட்டத்தில் (குஜராத்) எஸ்பியாக பதவியேற்றபோது, தினசரி ஊதியம் தொடர்பான வழக்கு இருந்தது. உ.பி.யைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த சிறுமியை கடத்திச் சென்று சொந்த மாநிலத்தில் விற்றுள்ளார். அங்கு விவசாய கூலி வேலை செய்து வந்தார். நாங்கள் அவளை காப்பாற்ற முடிந்தாலும், இதுபோன்ற ஏராளமான வழக்குகள் தீர்க்கப்படாமல் உள்ளன”என்று கூறினார்.

இதுபற்றி கூறிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஹிரேன் பேங்கர், “கேரளா பெண்களை பற்றி பாஜக தலைவர்கள் விமர்சிக்கிறார்கள். ஆனால், நாட்டின் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரின் சொந்த மாநிலமான குஜராத்தில் 40,000 க்கும் மேற்பட்ட பெண்கள் மாயமாகியுள்ளனர்” என்று பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார். இந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க..இனிமே இப்படித்தான்! அதிகாரிகள் மாற்றம்! அமைச்சர்கள் மாற்றம்? அதிரடியில் இறங்கிய முதல்வர் ஸ்டாலின் - ஏன்?

click me!