Asianet News TamilAsianet News Tamil

குடியுரிமை கொடுக்க நாங்க ரெடி... பிரான்ஸ் ஹீரோவை வரவேற்கும் ஆஸி., பிரதமர்!

சிட்னி மாலில் கத்தியுடன் நுழைந்த நபர் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்தினார். அப்போது அங்கிருந்த டேமியன் கெரோட், தைரியமாக அந்த நபரை தடுத்துப் பிடித்தார். இதனால் அந்த நபரிடம் இருந்து பலர் காப்பாற்றப்பட்டனர்.

Man Who Confronted Sydney Mall Attacker Offered Australian Citizenship sgb
Author
First Published Apr 16, 2024, 5:44 PM IST

ஆஸ்திரேலிய மாலில் வாடிக்கையாளர்கள் மீது தாக்குதல் நடத்திய நபரைத் துணிச்சலாக எதிர்த்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவருக்கு ஆஸ்திரேலிய அரசு தங்கள் நாட்டுக் குடியுரிமை அளிக்க முன்வந்துள்ளது.

சிட்னி மாலில் கத்தியுடன் நுழைந்த நபர் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்தினார். அப்போது அங்கிருந்த டேமியன் கெரோட், தைரியமாக அந்த நபரை தடுத்துப் பிடித்தார். இதனால் அந்த நபரிடம் இருந்து பலர் காப்பாற்றப்பட்டனர். இருப்பினும் சனிக்கிழமை நடந்த இந்தத் தாக்குதலில் ஆறு பேர் கொல்லப்பட்டனர். 12 பேர் காயமடைந்தனர்.

இந்நிலையில், ஆஸ்திரேலியா நாட்டு பிரதமர் ஆண்டனி அல்பனீஸ் டேமியன் கெரோட்டைப் பாராட்டியுள்ளார். சிட்னி மாலில் எஸ்கலேட்டரில் தாக்குதல் நடத்தியவரை எதிர்கொண்ட அவரது அசாதாரண துணிச்சலுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

"டேமியன் கெரோட்டிடம் நான் இதைச் சொல்ல விரும்புகிறேன். நீங்கள் விரும்பும் வரை இந்த நாட்டில் தங்குலாம். நாங்கள் உங்களை வரவேற்கிறோம்" " என்று அல்பனீஸ் கூறியுள்ளார்.

மேலும், "இவர் ஆஸ்திரேலிய குடிமகனாக ஆவதைக்கூட நாங்கள் வரவேற்க விரும்புகிறோம். ஆனால், அது பிரான்ஸுக்கு இழப்பாக இருக்கும். எனவே அவரது அசாதாரண துணிச்சலுக்காக அவருக்கு நன்றி கூறுகிறோம்" என்று ஆஸி. பிரதமர் அல்பனீஸ் குறிப்பிட்டுள்ளார்.

"நாம் கடினமான பிரச்சினைகளை எதிர்கொள்ளும் நேரத்தில், இந்த நாட்டின் குடிமகன் அல்லாத ஒருவர் அந்த எஸ்கலேட்டர்களின் உச்சியில் தைரியமாக நின்று, இந்த குற்றவாளியைத் தடுத்து நிறுத்தியிருக்கிறார்" என்றும் அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.

சிட்னி நகரின் கிழக்கு புறநகர் பகுதியில் உள்ள பரபரப்பான வணிக வளாகத்தில் சனிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலால் ஆஸ்திரேலியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த பயங்கரத் தாக்குதலில் 5 பெண்களும் ஒரு பாகிஸ்தானியரும் கொல்லப்பட்டனர்.

தாக்குதல் நடத்திய ஜோயல் கவுச்சி மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால், அவர் பெண்களைக் குறிவைத்துத் தாக்கினாரா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios