விழுப்புரத்தில் வரும் 24-ஆம் தேதி விஜயகாந்த் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்…
விழுப்புரம்
விழுப்புரத்தில் வரும் 24-ஆம் தேதி தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் கரும்பு நிலுவைத் தொகை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.
விழுப்புரம் மாவட்டத்தில், தேமுதிக ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை நடைப்பெற்றது.
இதற்கு மாவட்ட அவைத் தலைவர்கள் கணபதி, கோவி. முருகன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்டப் பொருளாளர்கள் தயாநிதி, கருணாகரன் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் எல்.வெங்கடேசன் பேசியது:
“விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயிகள் பல்வேறு இன்னல்களுக்கு இடையே விளைவித்து ஆலைகளுக்கு அனுப்பிய கரும்புக்கு வழங்க வேண்டியத் தொகையை வழங்காமல் இருந்து வருகின்றனர். இதனால், விவசாயிகள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.
விவசாயிகளுக்குக் கிடைக்க வேண்டிய நிலுவைத் தொகை வழங்காததைக் கண்டித்தும், உடனடியாக அத்தொகையை வழங்கக் கோரியும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகம் முன்பு தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் வரும் 24-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, நகர, பேரூர் கழக நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள், பல்வேறு கழக அணியினர் என அனைத்து நிர்வாகிகளும் பங்கேற்ற வேண்டும்” என்று அவர் கேட்டுக் கொண்டார்.
இந்தக் கூட்டத்தில் கேப்டன் மன்றத் துணைச் செயலாளர் சந்திரசேகரன், மாவட்டத் துணைச் செயலாளர்கள் புருஷோத்தமன், அண்ணாதுரை, குழந்தைவேல், சுந்தரேசன், விஜய்குமார், சூடாமணி, வசந்தா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.