இன்றும் நாளையும் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்...! மீன் வளத்துறை எச்சரிக்கை...!
இன்றும் நாளையும் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்றும் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடல் அழுத்தம் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக அலையின் சீற்றம் அதிகரிக்கும் என்று வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் தெரிவித்திருந்தார். அதாவது நேற்றும் இன்றும் கடல் அலையின் சீற்றம் அதிகரிக்கும் என்று தெரிவித்திருந்தார். மீனவர்களும், பொதுமக்களும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. இந்த எச்சரிக்கையை அடுத்து மீனவர்களும், படகு மீனவர்களும் கடலுக்குள் செல்லவில்லை.
கன்னியாகுமாரி மாவட்டத்தில் கடல் கடும் சீற்றத்துடன் காணப்பட்டது. அலையின் சீற்றத்தால், 18 கிராமங்களுக்குள் கடல் நீர் புகுந்தது. சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு கடல் நீர் புகுந்தது. ராட்சத அலைகள் தாக்கியதில் 150 வீடுகள் சேதமடைந்தன.
மண்டைக்காடு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு சுவர்களும் ராட்சத அலைகளால் சேதமடைந்தன. பாதிக்கப்பட்ட மக்கள் வேறிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளன. தற்காலிகமாக 6 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.
ராமேஸ்வரம் பகுதி தனுஷ்கோடிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது. கடலில் குளிக்க வேண்டாம் என்ற அறிவுறுத்தலையும்
மீறி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் சிலர் நீராட முயன்றவர்களை கடலோர பாதுகாப்பு குழுவினர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
கடல் சீற்றம் காரணமாக கடல்வாழ் உயிர்களான பாம்பு உள்ளிட்டவை கடற்கரையில் ஒதுங்கின. இதனைப் பார்த்த மக்கள் கடலில் என்ன நிகழ்கிறது என்று அச்சத்துடன் இருந்தனர். இதனைத் தொடர்ந்து கடலில் வாழும் பாம்புகள் கடற்கரை நோக்கி வருகின்றன. இதனை பிடித்து கடலில் விட்டால் மீண்டும் கடற்கரை நோக்கி வருவதாக மக்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில், மேலும் இரண்டு நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று மீன்வளத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கடல் சீற்றம் இன்றும் நாளையும் கடல் அலைகள் மிகவும் சீற்றத்துடன் காணப்படும் என்று மீன் வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.