சரியான விலை கிடைக்காததால் பூசணிக்காய்களை சாலையில் கொட்டிய விவசாயிகள்; ஏமாற்றத்தின் உச்சம்…
பெரம்பலூர்
விழாக் காலங்களில் வியாபாரம் செய்வதற்காக வாங்கிய பூசணிக்காய்களுக்கு சரியான விலைக் கிடைக்காததால் விற்பனையாகாத பெரும்பாலான பூசணிக்காய்களை விவசாயிகள் சாலை ஓரங்களில் கொட்டினர்.
ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விழாக்களையொட்டி வீடுகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் வழிபாடுகள் நடைபெறும் என்பதால் சாம்பல் பூசணிக்காய்களுக்கு கூடுதலாக தேவைப்படும்.
இதனைக் கருத்தில் கொண்டு பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் சாம்பல் பூசணியைப் பயிரிட்டனர்.
இந்த நிலையில் ஆயுதபூஜை நெருங்கியதும் பூசணிக்காய்களை அறுவடை செய்து நாள்தோறும் காய்கறி சந்தைக்கும், பிரதான சாலைகளுக்கு கொண்டுவந்தும் விற்பனை செய்தனர். இதனால், விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைத்து வந்தது.
இந்தாண்டும் ஏராளமான விவசாயிகள் சாம்பல் பூசணிக்காய்களை பயிரிட்டனர். அவ்வப்போது பரவலமாக மழை பெய்ததால், சாம்பல் பூசணிக்காயின் விளைச்சல் இருமடங்காக அதிகரித்தது.
கடந்தாண்டு ரூ.50 முதல் ரூ.100 வரை விற்கப்பட்ட சாம்பல் பூசணிக்காய்கள், இந்தாண்டு அதிகபட்சமாக ரூ.50 வரை மட்டுமே விலைப்போனது.
இதுகுறித்து, விவசாயி ஒருவர் கூறியது:
கடந்தாண்டு பூசணிக்காய் விலை அதிகமாக இருந்ததை கருத்தில் கொண்டு, நிகழாண்டு பெரம்பலூர் மாவட்டத்தில் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு இருந்தது. ஆனால், உரிய விலைக் கிடைக்கவில்லை.
மேலும், பெரும்பாலான வியாபாரிகள் வெளி சந்தையில் இருந்து ஒரு டன் பூசணிக்காய்கள் ரூ.3 ஆயிரத்துக்கு வாங்கி வந்து விற்பனையில் ஈடுபட்டனர். அதிகளவில் பூசணிக்காய் விற்பனைக்கு வந்ததால் எதிர்பார்த்த அளவுக்கு விலை கிடைக்கவில்லை.
ஆயுத பூஜைக்காக அறுவடைச் செய்யப்பட்டு விற்பனைக்குக் கொண்டுவந்த விவசாயிகள் சிலர் உரிய விலை கிடைக்காததாலும், விற்பனையாகாததாலும் ஏமாற்றம் அடைந்தனர்.
மேலும், விற்பனையாகாத பூசணிக்காய்களை வாகனங்களில் ஏற்றிச் செல்வதற்கு கூட விற்பனையாகாததால் சாலை ஓரங்களில் தூக்கிப் போட்டுவிட்டுச் சென்றனர்.